ஆலந்தூர், பிப்.28: நங்கநல்லூர், 4வது பிரதான சாலையை சேர்ந்தவர் ராஜேஷ் (31). இவர் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 16ம் தேதி இவரது கடைக்கு வந்த பெண் ஒருவர், செயின் வேண்டும் என்று கேட்டுள்ளார். கடையில் இருந்த செயின்களை ராஜேஷ் எடுத்து காண்பித்துள்ளார். நீண்ட நேரம் பார்த்துவிட்டு, தனக்கு பிடித்த டிசைன் ஏதும் இல்லை, என கூறிவிட்டு, நகை ஏதும் வாங்காமல் அந்த பெண் சென்றுவிட்டார்.
பின்னர், செயின்களை சரிபார்த்த போது, அதில் 12 கிராம் செயின் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது, அந்த பெண், செயினை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. இதுகுறித்து பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், மேலக்கோட்டையூரை சேர்ந்த பிரியங்கா (36) என்பது தெரிய வந்தது. அவரை நேற்று கைது செய்தனர்.
The post நகை கடையில் 12 கிராம் செயின் திருடிய பெண் கைது appeared first on Dinakaran.
