×

வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்று நேரில் ஆஜராக சீமானுக்கு மீண்டும் சம்மன்: நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கு சூடுபிடித்தது

சென்னை: நடிகை விஜயலட்சுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி குடும்பம் நடத்திய வழக்கில், சீமான் நேற்று போலீஸ் நிலையத்தில் ஆஜராகவில்லை. மீண்டும் இன்று காலை 11 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று அவரது பங்களாவில் சம்மன் ஒட்டப்பட்டது. இதையடுத்து, நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.

பிரபல நடிகை விஜயலட்சுமி 2023 ஆகஸ்ட் 28ம் தேதி சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், திரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான், என்னை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார். பிறகு சீமானுடன் கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்ததன் பயனாக, 7 முறை கருவூற்றேன். சீமான் என்னை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்தார். பிறகு என்னை விட்டுவிட்டு கயல்விழி என்பவரை திருமணம் செய்து கொண்டு என்னை ஏமாற்றிவிட்டார்.

நான் கொடுத்த புகாரின்படி வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் கடந்த 2011ம் ஆண்டு சீமான் மீது கற்பழிப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அப்போது அதிமுக ஆட்சி என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையே இயக்குநர் சீமான், அவரது கட்சியின் முக்கிய நிர்வாகியான மதுரை செல்வம் மூலம் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தி சில மாதங்கள் ₹50 ஆயிரம் பணம் அனுப்பினார். பிறகு பணம் அனுப்பவில்லை. இதுகுறித்து கேட்ட போது, மதுரை செல்வம் மூலம், ஆபாச வீடியோ அனுப்பி சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவதாக மிரட்டுகிறார். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

நடிகை விஜயலட்சுமியின் புகாரின் மீது, விசாரணை நடத்த உயர் காவல்துறை அதிகாரிகள் வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசுக்கு உத்தரவிட்டனர். அதன்படி, நடிகை விஜயலட்சுமியிடம் வளசரவாக்கம் மகளிர் போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து 164 சட்டப்பிரிவின் படி போலீசார், நடிகை விஜயலட்சுமியை திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற கூடுதல் மாஜிஸ்திரேட் பவித்ரா முன்பு ஆஜர்படுத்தினர். விஜயலட்சுமி 3 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்தார். சீமானுடன் வாழ்ந்ததற்கான ஆவணங்களை சமர்ப்பித்தார்.

அதைதொடர்ந்து, இயக்குநர் சீமானுக்கு வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விளக்கம் கேட்டு அவர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர். ஆனால் சொன்னபடி சீமான் வளசரவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் சங்கர், விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி, 2023 செப்டம்பர் 18ம் தேதி காலையில் சீமான் நேரில் ஆஜராவார் என தெரிவித்திருந்தார். ஆனால் நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொடுத்த புகாரை 2023 செப்டம்பர் 15ம் தேதி இரவு வளசரவாக்கம் காவல் நிலைத்திற்கு நேரில் ெசன்று கடிதம் மூலம் சீமான் மீது கொடுத்த வழக்கை திரும்ப பெறுவதாக மனு அளித்தார். அதன் பிறகு சீமான் காவல்துறை அனுப்பிய சம்மன்படி தனது மனைவி கயல்விழியுடன் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அதேநேரம், நடிகை விஜயலட்சுமி, தன் மீதான பாலியல் வழக்கை வாபஸ் பெற்றாலும், நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்பு 164 சட்டப்பிரிவின் கீழ் வாக்குமூலம் அளித்திருந்ததால், இந்த வழக்கு ரத்து செய்யப்படாமல் நிலுவையில் இருந்தது. இதற்கிடையே சீமான் தன் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் வழக்கை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். வழக்கை விசாரணைக்கு எடுத்த உயர் நீதிமன்றம், பாலியல் பலாத்காரம், கருக்கலைப்பு, மிரட்டல் போன்ற புகார்களுக்கு விசாரணை நடத்த முகாந்திரம் உள்ளது. எனவே சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், இந்த வழக்கை 12 வரங்களில் காவல்துறை முறையாக விசாரித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் நடிகை விஜயலட்மியிடம் பாலியல் புகாரின் மீது விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். மேலும், 7 முறை கட்டாயப்படுத்தி கருச்சிதைவு செய்ய சீமான் மருத்துவமனையில் கையெழுத்து போட்டது உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை விசாரணை அதிகாரிகளிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சீமான் நேற்று நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக சீமானிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை விசாரணை அதிகாரிகள் தயாரித்து வைத்திருந்தனர். ஆனால், சீமான் கட்சி வேலையாக முன்பே திட்டமிடப்பட்டதால் நேற்று நேரில் ஆஜராக முடியவில்லை என்றும், நேரில் ஆஜராக 4 வாரம் அவசாகம் கேட்டு அவரது வழக்கறிஞர் சங்கர் கோயம்பேடு துணை கமிஷனர் அதிவீரபாண்டியனிடம் கடிதம் கொடுத்தார்.

அதேநேரம் சீமான் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. உச்ச நீதிமன்றம் பாலியல் வழக்கு ஒன்றில் ‘திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்களுடன் பாலியல் உறவில் இருப்பது பாலியல் குற்றமே’ என தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனால் சீமான் மீதான பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம் எந்த மாதிரியான உத்தரவு வழங்கும் என்று பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதற்கிடையே காவல்துறையின் சம்மன்படி நேற்று சீமான் நேரில் ஆஜராகவில்லை என்பதால், போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினர். அதன்படி, நீதிமன்றம் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காலக்கெடு விதித்துள்ளதால், கட்டாயம் சீமானிடம் விசாரணை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் காவல்துறைக்கு எழுந்துள்ளது.

எனவே சட்ட நிபுணர்கள் ஆலோசனைப்படி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் கடைசி வாய்ப்பாக இன்று காலை 11 மணிக்கு விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என்று சின்ன நீலாங்கரை சந்தீப் அவென்யூவில் உள்ள சீமான் வீட்டிற்கு நேற்று வளசரவாக்கம் போலீசார் சென்றனர். அப்போது சீமான் வீட்டில் பாதுகாப்பு பணி மேற்கொண்ட காவலர்கள், சீமான் வீட்டில் இல்லை என்றும், சம்மனை நாங்க வாங்க முடியாது என்றும் கூறினர். அதைதொடர்ந்து போலீசார் சீமான் வீட்டின் பங்களா சுவரில் இன்று காலை நேரில் ஆஜராக வேண்டும் இல்லை என்றால் கைது நடவடிக்கை பாயும் என்ற சம்மனை ஒட்டினர்.

கைதாகிறாரா சீமான்?
சீமான் போலீசார் அனுப்பிய சம்மனை தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வில்லை என்றால், போலீசார் சீமானை கைது செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏன் என்றால், சென்னை உயர் நீதிமன்றம் நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கை 12 வாரங்களில் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு காலக்கெடு விதித்துள்ளது. இதனால் வேறு வழியின்றி உரிய நேரத்தில் விசாரணை நடத்தும் ஏதுவாக காவல்துறை சம்மன் படி சீமான் நேரில் ஆஜராக வில்லை என்றால் அவரை கைது செய்ய வேண்டிய கட்டாயம் காவல்துறைக்கு எழுந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் சட்ட நிபுணர்களுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 நாட்களுக்கு முன்புகூட என்னிடம் சமாதானம் பேச ஆட்களை அனுப்பினார் சீமான்: நடிகை விஜயலட்சுமி வீடியோ மூலம் காட்டமான பதில்
நடிகை விஜயலட்சுமி, நேற்று ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது:
சீமான் அவர்களே…. முதலில் சொன்னீங்க விஜயலட்சுமி யாருனே தெரியாது என்று சொன்னீங்க… அவங்க காங்கிரஸ்காரர்கள் கொண்டு வந்ததாக சொன்னீங்க.. அடுத்தது நான் உங்கள் மீது வழக்கு கொடுத்த போது சொன்னீங்க.. அவங்களை பாரதிய ஜனதா இயக்கிகிட்டு இருக்கிறது என்று சொன்னீங்க…. இப்போ மதுரை செல்வத்தை வைத்து நீங்கள் 2023ல் பேச்சு வார்த்தைக்கு வந்தீங்க இல்லையா….. அதில் வந்து நாள் மாதம் மாதம் ₹50 ஆயிரம் கொடுத்துவிடுகிறேன். என்னை பற்றி எங்கேயும் பேசாதே…என்று மாதம் மாதம் எனக்கு 50 ஆயிரம் ரூபாய் போட்டீங்க….வீடியோக்கள் எல்லாம் வாங்கினீங்க. அப்புறம், ‘மதுரை செல்வம்’ உங்கள் வீட்டுக்காரரிடம் பேச நீங்க யாரிடம் கேட்கணும் என்று வாக்குமூலம் எல்லாம் கொடுத்தான்.

அப்போது உங்கள் பொன்னான வாயால் வந்து தானே ‘பொண்டாட்டி… பொண்டாட்டி என்று வீடியோவில் பம்புனீங்க…அந்த வீடியோக்களை எல்லாம் காவல்துறையிடம் கொடுத்து, அதை காவல்துறை வந்து எடுத்துக்கொண்டு நீதிமன்றத்தில் கொடுத்து எல்லாம் பார்த்து தான், விஜயலட்சுமி அவங்களுடைய முதல் மனைவியா என்று கேட்டு இருக்காங்க. இப்போ திமுக ஒன்னும் போன வருஷம் விஜயலட்சுமிக்கு ₹50 ஆயிரம் கொடுத்து இதுபோன்ற கேவலமான வேலையை பன்னு என்று சொல்லவில்லை. ஏன் அவங்கள வந்து சும்மா வம்புக்கு இழுக்கிறீங்க..

அப்புறம் இன்னொரு விஷயம் ஒன்று சொன்னீங்களாம்….அந்த பொம்பளையை கொஞ்சம் வந்து நேரில் வரசொல்லுங்க, நான் உட்காந்து பேசுகிறேன் என்று. நான் காத்தி இருக்கிறேன் சீமான் அவர்களே…உங்களை நேரில் பார்த்து, உனக்கு என்னை பார்த்தால் எப்படி ‘டா’ தெரிகிறதுனு அப்படி கேட்கணும் காத்துக்கிட்டு இருக்கேன். கொஞ்சம் காவல்துறையிடம் சொல்லுங்க, உடனே அதற்கு அவங்க அரெஞ் பண்ணிடுவாங்க… ஏமாத்தாதே சீமான் அவர்களே. என்னுடைய பாவத்தை கட்டிக்காதீங்க.. 2 நாளைக்கு முன்னால் கூட சமாதான பேச்சுவார்த்தைக்கு நீங்க ஆட்களை அனுப்பிவிட்டு.. நீங்க அப்படியே பிர்ஸிடம் வந்து, அந்த பொம்பள, அவள் அப்படி, இப்படி என்று இன்று கூட துரோகம் பண்றீங்களா. அதான் நான் சொல்லிக்கிட்டு இருக்கிறேனே, என்னுடைய பாவம் உங்களை சும்மாவே விடாது. இன்னும் எப்படி எப்படி எல்லாம் படுத்தி எடுக்க போகிறது என்று பாருங்க. சீமான் இந்த வீடியோவை பார்க்கணும். இவ்வாறு நடிகை விஜயலட்சுமி தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

The post வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்று நேரில் ஆஜராக சீமானுக்கு மீண்டும் சம்மன்: நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கு சூடுபிடித்தது appeared first on Dinakaran.

Tags : Seeman ,Valasaravakkam police station ,Vijayalakshmi ,Chennai ,
× RELATED பலமுறை கண்டித்தும் உறவை தொடர்ந்ததால்...