சென்னை, பிப்.22: சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள தொழிலதிபர் அப்துல் காதர் என்பவரின் வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் அப்துல் காதர். தொழிலதிபரான இவர், மண்ணடியில் தலைமையிடமாக கொண்டு பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அதில் சட்டவிரோதமாக பணப் பறிமாற்றம் செய்து இருந்ததாக கூறப்படுகிறது.
அதைதொடர்ந்து இந்த வழக்கு அமலாக்கத்துறை விசாரணைக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். அதன்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் தொழிலதிபர் அப்துல் காதர் சட்டவிரோதமாக பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழு நேற்று காலை 7 மணி முதல் நள்ளிரவு வரை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அப்துல் காதர் வீடு மற்றும் அவரது அலுவலகம் அமைந்துள்ள மண்ணடியில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வழக்கு தொடர்பாக சில முக்கிய ஆவணங்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இந்த சோதனை முடிந்த பிறகு தான் முழு விவரங்கள் தெரியவரும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக கீழ்ப்பாக்கம் தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை தீவிர சோதனை: முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை appeared first on Dinakaran.
