×

ரூ.1141.23 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட 109 கி.மீ நீள செய்யூர்-வந்தவாசி-போளூர் சாலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை-கன்னியாகுமரி தொழில்தடத் திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன், நில எடுப்பு, பிற துறை சார்ந்த குழாய்களை மாற்றியமைத்தல் மற்றும் பராமரிப்பு செலவினம் உட்பட 1141 கோடியே 23 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், 109 கிலோ மீட்டர் நீளத்திற்கு 10 மீட்டர் சாலையாக அகலப்படுத்தப்பட்டு, சாலை பாதுகாப்பு அம்சங்களுடன் தரம் உயர்த்தப்பட்ட செய்யூர்-பனையூர் இணைப்புச் சாலை உள்ளிட்ட செய்யூர்-வந்தவாசி-போளூர் சாலையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இத்திட்டத்தில், மருதாடு, வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஆகிய 3 ஊர்களுக்கு புறவழிச்சாலைகள், மழைநீர் வடிகால்கள், 5 உயர்மட்ட பாலங்கள், 14 சிறு பாலங்கள், 225 குறு பாலங்கள், சாலைப் பாதுகாப்பினை உறுதி செய்ய தெருவிளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பொதுமக்களுக்கான கழிப்பறை வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையின் இருபுறங்களில் 47,700 மரக்கன்றுகள் நடப்பட்டு நன்கு பராமரிக்கப்படுகிறது. இத்திட்டத்தில், 7 ஆண்டுகளுக்கான செயல்திறன் அடிப்படையிலான பராமரிப்புப் பணியும் உள்ளடங்கும்.

இத்திட்டச் சாலையானது, கிழக்கு கடற்கரைச் சாலை, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் விழுப்புரம்-மங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கின்றது. இத்திட்டத்தில் மருதாடு, வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஆகிய 3 ஊர்களுக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால், கனரக வாகனங்கள் போக்குவரத்து நெரிசலும், பயண நேரமும் குறையும். அத்துடன் செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலுள்ள 67 கிராமங்களுக்கு விவசாய விளைபொருட்களை எடுத்துச் செல்லவும், அருகிலுள்ள நகர்புறங்களில் அமைந்துள்ள பள்ளி, கல்லூரி, மற்றும் மருத்துவமனை ஆகியவற்றிற்கு பொதுமக்கள் எளிதாக செல்லவும் இயலும்.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளர் செல்வராஜ், சென்னை-கன்னியாகுமரி தொழில்தடத் திட்ட இயக்குநர் பாஸ்கர பாண்டியன்,
சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட திட்ட தலைமை பொறியாளர் ஜெபசெல்வின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post ரூ.1141.23 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட 109 கி.மீ நீள செய்யூர்-வந்தவாசி-போளூர் சாலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : JIRUR- ,VANDVASI-BOLOOR ,MAHLWAR MU ,. K. Stalin ,Chennai ,Industrial Project ,Asian Development Bank ,Chengalpattu ,Stalin ,Dinakaran ,
× RELATED டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜரான...