- ஜிம்கானா கிளப்
- கிண்டி ரேஸ்கோர்ஸ்
- சென்னை உயர் நீதிமன்றம்
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- சென்னை ரேஸ் கிளப்
- சென்னை…
- தின மலர்
சென்னை: சென்னை ரேஸ் கிளப்பில் உள்ள கோல்ஃப் மைதானத்தில், நீர்நிலை அமைப்பதற்கான பணிகளுக்கு தடை விதிக்கக் கோரிய ஜிம்கானா கிளப்பின் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸில் குதிரை பந்தய சுற்றுப்பாதையின் நடுவில் 147 ஆண்டுகளுக்கு முன் கோல்ஃப் மைதானம் அமைக்கப்பட்டது. இதனை மெட்ராஸ் ஜிம்கானா கிளப் நிர்வகித்து வருகிறது.
இந்த நிலையில் ரேஸ் கோர்ஸுக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கான குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு, ரேஸ் கோர்ஸின் சில வாயில்களுக்கு சீல் வைத்துள்ளது. இதனை எதிர்த்து ஜிம்கானா கிளப் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கோல்ஃப் மைதானத்தில் குளங்கள் தோண்டும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து, கோல்ஃப் மைதானத்தை சேதப்படுத்த தமிழக அரசுக்கு தடை விதிக்கக் கோரி ஜிம்கானா கிளப் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், ஜிம்கானா கிளப் மற்றும் ரேஸ் கோர்ஸ் உறுப்பினர்கள், இந்த கோல்ஃப் மைதானத்தில் விளையாடி வந்தனர். மைதானத்தை பராமரிக்க ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது.கடந்த 1951ம் ஆண்டு கோல்ஃப் மைதானம் அருகில் கிளப் ஹவுஸ் கட்டப்பட்டது. அங்குள்ள சமையலறை, மனமகிழ் மன்றம், மதுபான பாரில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த வசதிகளை 500 உறுப்பினர்கள் வரை வழக்கமாக பயன்படுத்தி வந்தனர்.
நாட்டிலேயே பழமையான 3வது கோல்ஃப் மைதானமான இந்த மைதானத்துக்கு செல்லும் நுழைவாயிலை சீல் வைக்கும் முன் ஜிம்கானா கிளப் தரப்பு விளக்கத்தை தெரிவிக்க எந்த அவகாசமும் வழங்கப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அரசுக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்நிலையில் அரசு அதிகாரிகள் கோல்ஃப் மைதானத்துக்குள் நுழைந்து, நீர்நிலை அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சேதத்தை சரி செய்ய 50 லட்சம் ரூபாய் வரை செலவாகும். எனவே, அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, அரசு நிலம் சென்னை ரேஸ் கோர்ஸுக்குத்தான் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று வழக்கு தொடர ஜிம்கானா கிளப்புக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை. இதே கோரிக்கையுடன் உரிமையியல் வழக்கையும் ஜிம்கானா கிளப் தாக்கல் செய்துள்ளது என்றார்.வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, ரேஸ் கோர்ஸுக்கு குத்தகைக்கு வழங்கிய அரசுக்கு சொந்தமான நிலத்தை அரசே எடுத்துக் கொள்ளும்போது அது குறித்து ஜிம்கானா கிளப்புக்கு எந்த நோட்டீசும் அளிக்க அவசியமில்லை. இந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
The post கிண்டி ரேஸ் கோர்ஸில் நீர்நிலை அமைக்கும் பணிகளுக்கு தடை கோரிய ஜிம்கானா கிளப் மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
