மதுரை: நீர்நிலைகளில் கட்டிடம் கட்ட விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து, அனைத்து கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரைச் சேர்ந்த காசிராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மாத்தூரில் சத்திரம் ஊருணி உள்ளது. இந்த ஊரணியில் ரூ.40 லட்சம் செலவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படுகிறது. நீர்நிலைகளில் எவ்வித கட்டிடங்களும் கட்டக்கூடாது என நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சத்திரம் ஊருணியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட அனுமதி வழங்கியது சட்டவிரோதம். இதனால் சத்திரம் ஊருணியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட தடை விதித்தும், மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் நோக்கத்தில் செயல்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவும், கட்டுமானப் பணிக்கு செலவிட்ட பணத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வசூலிக்குமாறும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர், ‘‘ஊருணிக்குள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. நீர்நிலைகளில் கட்டிடம் கட்டக் கூடாது என நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இந்த சுற்றறிக்கை அனுப்பியது குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
The post நீர்நிலைகளில் கட்டிடம் கட்ட தடை அனைத்து கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

