செய்யாறு, பிப்.16: செய்யாறு சட்டமன்ற அலுவலகத்தில் நேற்று மாலை எம்பி எம்எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏ ஒ.ஜோதி ஆகியோர் நேற்று மாலை கூட்டாக பேட்டியில் குறிப்பிட்டதாவது: செய்யாறு சிப்காட்டில் 25 ஆயிரம் பெண் தொழிலாளர்கள் உட்பட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாக சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். செய்யாறு சிப்காட் தொடங்கியதால் செய்யாறு தொகுதி மட்டுமல்லாது ஆரணி, வந்தவாசி தொகுதிகளும் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் அதுமட்டுமல்லாமல் அண்டை மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களும் வேலை வாய்ப்பை பெற்றனர். குறிப்பாக கிராம புற மக்களின் பொருளாதார வளர்ச்சி உயர்ந்துள்ளது. அதன் அடிப்படையில் சிப்காட் அலகு திட்டம்1, அலகு திட்டம் 2, ஆகியவைகளில் தற்போது 54 தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
விவசாயி இல்லாத வெளி மாவட்டத்தை சேர்ந்த அருள் என்பவரின் தூண்டுதலின் பேரில் சில விவசாயிகள் மேல்மா சிப்காட் எதிர்ப்பு என்ற பெயரில் சில அரசியல் கட்சிகள் தூண்டுதலோடு அவர்களது லாப நோக்கத்திற்காக சில விவசாயிகளை தவறாக பயன்படுத்தி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வகையில் சமூக வலைத்தளங்களில் கையகப்படுத்தும் நிலங்களில் உள்ள மரங்கள், கிணற்றின் தன்மை உள்ளிட்டவைகளை அளவீடு செய்து மதிப்பீடு செய்ய வந்த அதிகாரிகளை விவசாயிகள் விரட்டி அனுப்பி விட்டதாக வீண் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
இது போன்ற வீண் வதந்திகளை பரப்பும் விஷமிகள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு எப்போதும் திமுக அரசு என்றைக்கும் பாதுகாப்பாக இருக்கும். வீண் வதந்திகளை நம்பாமல் இளைஞர்களின் எதிர்கால வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு தொழில் வளர்ச்சிக்காக கிராமப்புற இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அரசுக்கு ஆதரவு தர வேண்டும் என தெரிவித்திருந்தனர். மேலும் பேட்டியின்போது தற்போது கையகப்படுத்தும் நிலம் தரிசாக இருப்பதை நேற்று பிற்பகல் எடுத்த (ஜியோ மேப் பதிவுடன்) கிராமங்களில் எடுத்த புகைப்படங்கள் பொட்டல் காடாகவும், கருவேலம் மரங்கள் நிறைந்த பூமியையும், நிலம் அரசுக்கு கொடுப்பதற்கு சம்மதம் தெரிவித்து பலரது பேட்டிகளையும் செய்தியாளர்கள் முன்னிலையில் காண்பித்தனர். பேட்டியின்போது திமுக ஒன்றிய செயலாளர்கள் வெம்பாக்கம் மத்தியம் ஜே.சி.கே சீனிவாசன், அனக்காவூர் கிழக்கு ஏ.ஜி.திராவிட முருகன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் அ.பெ.ராஜ்குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.
The post நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தவறாக சித்தரித்து வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எம்பி, எம்எல்ஏ எச்சரிக்கை செய்யாறு மேல்மா சிப்காட் திட்டத்திற்கு appeared first on Dinakaran.
