×

பாஜக மாஜி முதல்வர் தொடர்பான கொரோனா நிதி முறைகேடு வழக்கு சிஐடி-க்கு மாற்றம்: கர்நாடக அரசியலில் பரபரப்பு

பெங்களூரு: பாஜக மாஜி முதல்வர் தொடர்பான கொரோனா நிதி முறைகேடு வழக்கு சிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மாநில பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா ஆட்சி காலத்தில், கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு கர்நாடகா மாநில அரசு நிதியை ஒதுக்கியிருந்தது. மொத்தமாக ரூ.13,000 கோடி அளவுக்கு செலவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இதில் ரூ.1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

இதுகுறித்து ஆய்வு செய்ய நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை வெளியானது. இந்த அறிக்கையின்படி, கொரோனா நிதியில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் ஊழல் செய்யப்பட்டிருப்பதாகவும், செலவு குறித்த கோப்புகள் சில காணாமல் போக செய்யப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் புகார் எழுப்பியது. இவ்விவகாரம் தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களுக்கு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. விதனா சவுதா காவல் நிலையத்தில் கடந்த டிசம்பர் 13 அன்று பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரில், மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதனால் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முன்னாள் சுகாதார அமைச்சர் ராமுலு, பாஜக எம்பி சுதாகர் ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கர்நாடகா அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனா நிதி முறைகேடு தொடர்பான வழக்கை குற்றவியல் புலனாய்வுத் துறையின் (சிஐடி) விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிஐடி காவல் கண்காணிப்பாளர் ராகவேந்திர ஹெக்டே தலைமையிலான குழு, கொரோனா நிதி முறைகேடு தொடர்பான விசாரணையை நடத்தும்’ என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரித்து வந்த நிலையில், தற்போது இவ்வழக்கு விவகாரம் குற்றவியல் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) வழக்கு மற்றும் பழங்குடி நல வாரியம் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, தற்போது முந்தைய பாஜக அரசின் கொரோனா நிதி முறைகேடு விவகாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. அதனால் காங்கிரஸ் – பாஜக இடையிலான மோதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

The post பாஜக மாஜி முதல்வர் தொடர்பான கொரோனா நிதி முறைகேடு வழக்கு சிஐடி-க்கு மாற்றம்: கர்நாடக அரசியலில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Karnataka ,Bengaluru ,Chief Minister ,CID ,Yediyurappa ,
× RELATED அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’,...