×

கஜா புயலால் பாதிக்கப்பட்டு, இழப்பீடு கிடைக்க பெறாதவர்கள் மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!!

சென்னை : கஜா புயலால் பாதிக்கப்பட்டு, இழப்பீடு கிடைக்க பெறாதவர்கள் மனு அளித்தால் பரிசீலிக்கப்படும்  என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு வீசிய கஜா புயலால், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் புயல், மழை, வெள்ளத்திற்கு 63 பேர் பலியாகினர். 732 கால்நடைகள் உயிரிழந்தனர். 88,000 ஹெக்டேர் பரப்பு நெற் பயிர்கள், வாழை, தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டன. 56,942 குடிசை வீடுகளும் 30,322 ஓட்டு வீடுகளும் சேதமடைந்தன.பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் நிவாரண நிதி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு, இழப்பீடு கிடைக்க பெறாதவர்கள் இழப்பீடு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள், தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், கஜா புயலால் பாதிக்கப்பட்டுஇழப்பீடு கிடைக்க பெறாதவர்கள் அரசுக்கு விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தார்.இந்த வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், எவ்வளவு இழப்பீடு வழங்குவது என்பது குறித்து அரசு தான் சட்டப்படி முடிவெடுக்க வேண்டும். அரசு நியாயமான இழப்பீடு குறித்து முடிவெடுக்க வேண்டும் எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

The post கஜா புயலால் பாதிக்கப்பட்டு, இழப்பீடு கிடைக்க பெறாதவர்கள் மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Gaja cyclone ,Tamil Nadu government ,Chennai ,Madras High Court ,Delta ,Thanjavur ,Thiruvarur ,
× RELATED டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜரான...