விக்கிரவாண்டி, பிப். 6: விக்கிரவாண்டி அருகே மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஏழுசெம்பொன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானவேல்(34). இவர் விக்கிரவாண்டி அங்காளம்மன் கோயில் அருகே மெக்கானிக் கடை வைத்துள்ளார். கடைக்கு அருகிலேயே வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவருக்கும் வெள்ளிமேடுபேட்டை அருகே செங்கேணிகுப்பத்தைச் சேர்ந்த தேவிகா(26) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி தனுஷ்கா(6), சஞ்சய் (4) என இரு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தேவிகா, ஞானவேலை பிரிந்து சென்று தன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் மனைவியை பிரிந்து மன உளைச்சலில் இருந்த ஞானவேல் கடந்த 4ம் தேதி இரவு வீட்டில் விஷம் குடித்துள்ளார். அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்ததால் ஞானவேல் விஷம் குடித்தது யாருக்கும் தெரியவில்லை. நேற்று முன்தினம் இரவு உறவினர் வந்து ஞானவேல் வீட்டு கதவை தட்டிய போது திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினரும், அக்கம், பக்கத்தினரும் விக்கிரவாண்டி காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையிலான போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஞானவேல் இறந்து அவரது உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மனைவி பிரிந்த விரக்தியில் கணவன் விஷம் குடித்து தற்கொலை appeared first on Dinakaran.
