திருவாரூர், ஜன.31: திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு மருந்துகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டுவருவதாக விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவாருர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் சாரு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சம்பா பயிர்கள் சாகுபடி நேரத்திலும், அறுவடை நேரத்திலும் பெய்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும், தற்போது அறுவடை நடைபெற்று வரும் நிலையில் அறுவடை இயந்திரங்களின் தட்டுபாடுகள் அதிகளவில் இருந்து வருவதால் உரிய நேரத்தில் அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் வேளாண் பொறியியல் துறையில் பதிவு செய்த பின்னரும் குறிப்பிட்ட நேரத்தில் இயந்திரங்கள் கிடைப்பதில்லை.
எனவே உரிய அளவில் இயந்திரங்கள் கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகமும், வேளாண் பொறியியல் துறையும் நடவடிக்கை எடுத்திட வேண்டும், மாவட்டம் முழுவதும் குறைந்த மின்அழுத்தம் காரணமாக மின்மோட்டார்கள் பழுது ஏற்படும் நிலை உள்ளதால் சீரான மின்சாரம் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசினர். இறுதியாக கலெக்டர் சாரு பேசியதாவது: மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டில் குறுவை பருவத்தில் 99 ஆயிரத்து 905 ஏக்கரில் குறுவை சாகுபடியானது செய்யப்பட்டு 93 ஆயிரத்து 986 மெ.டன் அளவில் கொள்முதல் செய்யப்பட்டு இதன்மூலம் 20 ஆயிரத்து 960 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேலும், சம்பா மற்றும் தாளடி சாகுபடியாக 3 லட்சத்து 57 ஆயிரத்து 604 ஏக்கரில் சாகுபடியானது நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக மாவட்டம் முழுவதும் 532 அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இதுவரையில் விவசாயிகளிடம் 50 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில், நடப்பாண்டில் நெல் தரிசில் உளுந்து மற்றும் பச்சைபயறுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 133.455 எக்டேர் மதிப்பிற்கு 125 விவசாயிகள் பிரீமியத் தொகை செலுத்தியுள்ளனர். நெல் தரிசில் உளுந்து மற்றும் நெல் தரிசில் பச்சை பயிருக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்ய கடைசி தேதி அடுத்த மாதம் 17ந் தேதி (பிப்ரவரி) ஆகும். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய எக்டேர் ஒன்றிற்கு தொகை ரூ.222.3 செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. உணவு மற்றும் ஊட்டச்சத்து – பயறு வகை திட்டத்தின் கீழ் உளுந்து, பச்சைப் பயறு மற்றும் துவரையில் செயல் விளக்கங்களும், விதைகள் 50 சதவீதம் மானியத்திலும், விதைகள் உற்பத்தி மானியமும், நுண்ணூட்ட சத்து உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துக, இயற்கை உரங்கள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படவுள்ளன.
நெல் தரிசில் பயறு வகை சாகுபடி திட்டத்தின் கீழ் செயல் விளக்கங்களும், பயறு வகை விதைகள் 50 சதவீத மானியத்திலும், நுண்ணூட்டஉரம், சிப்சம், உயிர் உரங்களும், பயிர் பாதுகாப்பு மருந்துகள் 50 சதவீத மானியத்திலும், பயறு வகை விதைகள் உர மானியமும் வழங்கப்படவுள்ளன. மேற்குறிப்பிடபட்டுள்ள பயறுவகை பயிர் கால திட்டத்தின் கீழ் பயன்பெற தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதில் டி.ஆர்.ஒ சண்முகநாதன், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் புகாரி, கூட்டுறவு இணை பதிவாளர் சித்ரா, ஆர்.டி.ஒக்கள் சௌம்யா, யோகேஷ்வரன், வேளாண் இணை இயக்குநர் பாலசரஸ்வதி, துணை இயக்குனர் லெட்சுமிகாந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமாஹெப்சிபாநிர்மலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post திருவாரூர் மாவட்டத்தில் பயிர் பாதுகாப்பு மருந்துகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது appeared first on Dinakaran.
