விழுப்புரம், ஜன. 29: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்பி மீதான 4 அவதூறு வழக்குகள் விசாரணை அடுத்த மாதம் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஆரோவில் பகுதியில் கடந்த 2023 மார்ச் 10ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும், அதே ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி கோலியனூர் பொதுக்கூட்டத்திலும், மே 1ம் தேதி கோட்டக்குப்பம் நகராட்சி திடலில் நடைபெற்ற பொதுகூட்டம் மற்றும் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் ஜூலை 20ம் தேதி அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான சி.வி சண்முகம் எம்பி தமிழக அரசையும், முதலமைச்சரையும் அவதூறாக பேசியதாகவும், இதனால் முதலமைச்சரின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டதாக கூறி விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியன் தனித்தனியாக 4 அவதூறு வழக்குகள் தொடர்ந்தார்.
இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நேற்று நீதிபதி மணிமொழி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது சிவி சண்முகம் எம்பி நேரில் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வழக்கறிஞர் ராதிகா செந்தில் ஆஜராகி மனுதாக்கல் செய்தார். மேலும் ஆரோவில், கோட்டக்குப்பம் வழக்குகளை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் விழுப்புரம் பழைய பேருந்து நிலைய வழக்கில் நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், கோலியனூர் வழக்கில் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட முறை தவறு என்றும், முறையாக விசாரிக்க கோரி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறி அதன் நகலை சமர்ப்பித்தனர். இதையடுத்து 4 அவதூறு வழக்குகள் விசாரணை பிப்ரவரி 14ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி மணிமொழி உத்தரவிட்டார்.
The post விழுப்புரம் கோர்ட்டில் அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான 4 அவதூறு வழக்குகள் விசாரணை appeared first on Dinakaran.
