×

குவைத்தில் புகையால் பலியான 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: குவைத் நாட்டில் நெருப்பு மூட்டிய போது புகையின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், மங்கலம்பேட்டை கிராமத்தை சேர்ந்த முகமது யாசின் மற்றும் முகமது ஜுனைத் ஆகிய இருவரும் குவைத் நாட்டில் ஓட்டுநர்களாக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 19ம் தேதி இருவரும் தங்கியிருந்த அறையில் கடும் குளிரிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தீ மூட்டியதாகவும், நீண்ட இரவின் காரணமாக தீயை அணைக்காமல் அப்படியே உறங்கியதால் நெருப்பு அணைந்து ஏற்பட்ட புகையினால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துள்ளனர் என்றும், உயிரிழந்த இருவரின் உடல்களை கடந்த 22ம் தேதி குவைத் நாட்டிலேயே உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தலா ரூ.5 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post குவைத்தில் புகையால் பலியான 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kuwait ,Chief Minister ,MLA K. Stalin ,Chennai ,K. Stalin ,Cuddalore district ,Virthachalam ,Dinakaran ,
× RELATED 10 நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூருக்கு...