புதுடெல்லி: டெல்லி இப்போது முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் வளர்ச்சி மாடலை தான் விரும்புவதாக மக்களவை எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் சதர் பஜார் பகுதியில் நேற்று முன்தினம் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் உடல்நிலை பாதிப்பு காரணமாக அவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராகுல்காந்தி தனது பேஸ்புக்கில் டெல்லியில் பணவீக்கம், வேலையின்மை, காற்று மாசு மற்றும் ஊழல் போன்ற பிரச்னைகளை எடுத்துக்காட்டும் வீடியோ தொகுப்பை வெளியிட்டுள்ளார். மேலும் ராகுல் தனது பதிவில், ‘‘மோசமான கட்டுமானம், அசுத்தம், பணவீக்கம், வேலையின்மை, மாசு மற்றும் ஊழல் – என டெல்லியின் உண்மை பொதுமக்கள் முன் உள்ளது. டெல்லி இப்போது முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் அதே உண்மையான வளர்ச்சி மாடலை விரும்புகிறது. பிரதமர் மோடி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் தவறான பிரசாரம் மற்றும் மக்கள் தொடர்பு மாதிரியை அல்ல” என்று பதிவிட்டுள்ளார்.
The post டெல்லிக்கு ஷீலா தீட்சித் வளர்ச்சி மாடல் தேவை: ராகுல்காந்தி வலியுறுத்தல் appeared first on Dinakaran.
