சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படத்தில், நானும் ரவுடி தான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே நிராகரிக்க வேண்டும் என்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, நெட்பிளிக்ஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பார்த்தசாரதி, ஆவணப்படம் வெளியான ஒரு வாரம் கழித்து தான் தனுஷ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
இதற்கு தனுஷின் வொண்டர்பார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், நானும் ரவுடிதான் படத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சியில் அனைத்தும் தயாரிப்பாளருக்குத்தான் சொந்தம். படத்தின் ஒப்பந்தம் கையெழுத்தான போது வொண்டர்பார் நிறுவன அலுவலகம் வீனஸ் காலனியில் இருந்ததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். படத்தில் பயன்படுத்தப்பட்ட அந்த காட்சிகள் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டது. நயன்தாரா ஒப்பந்தம் செய்யும் போது அவர் செய்துள்ள சிகை அலங்காரம், உடை அலங்காரத்தில் இருந்து அனைத்தும் நிறுவனத்திற்கே சொந்தமானது என்று ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுள்ளார் என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வொண்டர்பார் நிறுவனத்தின் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று நெட்பிளிக்ஸ் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
The post நானும் ரவுடிதான் பட காட்சியை நயன்தாரா பயன்படுத்திய விவகாரம் நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கை எதிர்த்த மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
