சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 12.45 மணிக்கு, ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட வேண்டும். அந்த விமானத்தில் 159 பயணிகள், 8 விமான ஊழியர்கள் உள்பட 167 பேர் பயணிக்க இருந்தனர். விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாக, அதிகாலை 2.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, மீண்டும் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. உடனடியாக அவசரமாக, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அந்த விமானம் நேற்று அதிகாலை 4.10 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து பத்திரமாக தரையிறங்கியது. இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு, ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். அதோடு அந்த விமானத்தை பழுது பார்ப்பதற்காக, விமான பொறியாளர்கள் குழுவினர் ஈடுபட்டனர்.
ஆனால், விமானத்தை உடனடியாக பழுது பார்க்க முடியவில்லை. எனவே ஏர் இந்தியா நிறுவனம் மாற்று விமானம் ஒன்று ஏற்பாடு செய்தது. அதன் பின்பு பயணிகள் அனைவரும் அந்த மாற்று விமானத்தில் ஏற்றப்பட்டனர். இதையடுத்து நேற்று காலை 7.30 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் 159 பயணிகள், 8 விமான ஊழியர்கள் உள்பட 167 பேருடன் சுமார் 7 மணி நேரம் தாமதமாக சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது. இந்த ஏர் இந்தியா சிங்கப்பூர் விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து, எடுத்த துரித நடவடிக்கையால் விமானம் ஆபத்திலிருந்து தப்பியதோடு, விமானத்திலிருந்த 167 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் நேற்று அதிகாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post நடுவானில் பறந்தபோது சிங்கப்பூர் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு: அவசரமாக சென்னையில் தரையிறங்கியது appeared first on Dinakaran.
