×

பாணவேடுதோட்டம் ஏரி உடைந்து ஊருக்குள் புகுந்த தண்ணீர்: மற்ற ஏரிக்கரையை பலப்படுத்தும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள்!!!

சென்னை: பூவிருந்தவல்லி அருகே பாணவேடு கிராமத்தில் உள்ள பாணவேடு ஏரியின் கரை உடைந்தது. இது பாணவேடு, தென்னம்பாளையம் உள்ளிட்ட 3 ஏரிகளை கொண்டது. சுமார் 250 ஏக்கர்  பரப்பளவு கொண்ட இந்த ஏரி கடந்த 2 தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக முழுமையாக நிரம்பியது. பாணவேடு ஏரியின் கரை பலவீனமாக இருந்ததால் அதன் கரை உடைந்து வெள்ளநீரானது கால்வாய் வழியாக, பாணவேடுதோட்டம், பிடாரிதாங்கள் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ளது. குறிப்பாக இங்குள்ள மோனோ சிட்டி, மெட்ரோ சிட்டி உள்ளிட்ட பகுதியில் வெள்ளநீர் பாய்ந்து, அருகிலுள்ள விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஏறக்குறைய 50 ஏக்கருக்கு மேலான விவசாயம் நடைபெற்று வருகிறது. அந்த விவசாய நிலங்களிலும் வெள்ளநீரானது சூழ்ந்துள்ளது. மழை நின்றபோதிலும் இந்த ஏரியின் மேல்தட்டு பகுதியிலிருந்து வெள்ளநீரானது வடிந்து பாணவேடு ஏரிக்கு நீர்வரத்து இருந்து கொண்டேயிருந்தது. இதன் காரணமாக அந்த ஏரியின் கரை உடைந்து வெள்ளநீர் அங்கிருந்த குடியிருப்பை சூழ்ந்துள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் வீடுகளுக்குள்ளே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சோதனை மேற்கொண்டு இருக்கிறார்கள். அதேபோல எங்கெங்கு ஏரியில் கரை பலவீனமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் மணல்மூட்டை அடைப்பும், பணிகளும் நடைபெற்று வருகிறது. இருந்த போதிலும் இந்த ஏரியின் கரை பல இடங்களில் பலவீனமாக காணப்படுகிறது. இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதற்கட்டமாக பலவீனமாக இருக்ககூடிய மற்ற கரைகளை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், ஏரி உடைந்திருக்கும் பகுதியில், பலப்படுத்தும் பணியான மணல்மூட்டையை அடுக்கும் பணி துவங்கப்படவில்லை. ஏனென்றால் அதன் கரை பலகீனமாக இருப்பதால் வெள்ளநீரானது இதர குடியிருப்பு பகுதிக்குள் பாய்ந்து விடும் என்று, மற்ற கரைகளை பலப்படுத்தியபின்பு, இந்த உடைந்த ஏரியின் பகுதியை பலப்படுத்துவதாக பொதுப்பணித்துறை கூறியுள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் இந்த கரை உடைந்து தண்ணீரானது வெளியேறி வருவதால் ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், பல  ஏக்கர் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளது  …

The post பாணவேடுதோட்டம் ஏரி உடைந்து ஊருக்குள் புகுந்த தண்ணீர்: மற்ற ஏரிக்கரையை பலப்படுத்தும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள்!!! appeared first on Dinakaran.

Tags : Panavedudhottam lake ,CHENNAI ,Panavedu lake ,Panavedu ,Poovindavalli ,Thennampalayam… ,PWD ,Dinakaran ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...