புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அடுத்த மாதம் 10ம் தேதி ஓய்வு பெற இருப்பதால் திருமண பலாத்கார வழக்கை விசாரித்து முடிக்க போதிய நேரமின்மை காரணமாக 4 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மனைவியின் விருப்பமின்றி, அவருடன் கணவர் உறவு கொண்டால், அப்பெண் மைனராக இல்லாத பட்சத்தில் குற்றமில்லை என இந்திய தண்டனை சட்டப்பிரிவு 375லிலும், அதன் பிறகு பிஎன்எஸ் ஆக மாற்றப்பட்ட சட்ட விதியிலும் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற திருமண பலாத்காரத்தில் ஈடுபடும் ஆண்களுக்கு தண்டனை வழிவழங்க வகை செய்யும் வகையில் திருமண பலாத்காரத்தை குற்றமாக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தொடரப்பட்டன.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்படுகிறது. கடந்த 17ம் தேதி வழக்கின் இறுதி விசாரணை தொடங்கியது. வரும் நவம்பர் 10ம் தேதி தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெறுகிறார். வரும் 26ம் தேதி தீபாவளி விடுமுறை விடப்பட்டு நவம்பர் 4ம் தேதி நீதிமன்றம் மீண்டும் திறக்கப்படும். எனவே முக்கியமான இந்த விவகாரத்தில் நேரமின்மையை கருத்தில் கொண்டு, வழக்கை வேறு அமர்விற்கு மாற்றி 4 வாரத்திற்கு பிறகு பட்டியலிட தலைமை நீதிபதி நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
The post நவ.10ல் தலைமை நீதிபதி ஓய்வால் திருமண பலாத்கார வழக்கு 4 வாரத்திற்கு ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு appeared first on Dinakaran.