×

உணவு மோசம் என நடிகர் பார்த்திபன் புகார் சென்னை வந்தேபாரத் ரயில் ஒப்பந்ததாரருக்கு அபராதம்: அதிகாரிகள் நடவடிக்கை

சேலம்: சென்னை-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரசில் கடந்த 13ம் தேதி, சென்னையில் இருந்து கோவைக்கு நடிகர் பார்த்திபன் பயணித்துள்ளார். அவர், பயணிகளுக்கான உபசரிப்பு மற்றும் உணவு குறித்த புகார் புத்தகத்தில் ‘‘இரவு 7.22 மணிக்கு வழங்கிய உணவு மற்றும் சிக்கன் மோசமாக இருந்தது. உணவுக்காக பெருந்தொகையை வாங்கிக் கொண்டும், இப்படி பரிமாறுவது கண்டிக்கத்தக்கது. ஆரோக்கியம் அவசியம், நன்றி,’’ என எழுதியிருந்தார்.

இப்புகாரை தனது எக்ஸ் தளத்திலும் வெளியிட்டு இருந்தார். நடிகர் பார்த்திபனின் இப்புகார் குறித்து உரிய விசாரணை நடத்த தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பயணிகளுக்கு இரவு உணவு வழங்கியது, சேலம் ரயில்வே கோட்ட பகுதி என்பதால், சேலம் ரயில்வே அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சேலத்தை சேர்ந்த உணவு ஒப்பந்ததாரர் வழங்கிய உணவு என்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து அந்த ஒப்பந்ததாரர் உணவு தயார் செய்யும் சமையல் கூடத்திற்கு, சேலம் கோட்ட உதவி வணிக மேலாளர் குமாரபாண்டுரங்கா தலைமையிலான அலுவலர்கள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது சில குறைபாடுகளை கண்டறிந்தனர். அதனை எடுத்துக்கூறி, அந்த ஒப்பந்ததாருக்கு அபராதம் விதித்தனர். மேலும், இனி பயணிகளுக்கு வழங்கப்படுகின்ற உணவு மிகவும் தரமானதாகவும், எவ்வித குறைபாடும் இருக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.

The post உணவு மோசம் என நடிகர் பார்த்திபன் புகார் சென்னை வந்தேபாரத் ரயில் ஒப்பந்ததாரருக்கு அபராதம்: அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Parthiban ,Chennai ,Vandebharat ,Salem ,Coimbatore ,Chennai-Coimbatore ,Vande Bharat Express ,
× RELATED வந்தே பாரத் ரயிலில் தரமற்ற உணவு: நடிகர் பார்த்திபன் புகார்