×

போதிய பயணிகள் இல்லாததால் 8 விமானங்கள் ரத்து

சென்னை: சென்னைக்கு கன மழை எச்சரிக்கை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் பெங்களூரு, அந்தமான், டெல்லி மற்றும் மஸ்கட் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் 8 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் கன மழை, சூறைக்காற்று போன்றவைகளால் விமான சேவைகள் பாதிப்பு அடையாமல் இருப்பதற்காக, சென்னை விமான நிலையத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் அவ்வப்போது தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து அனுப்பி வரும், வானிலை அறிக்கையின் அடிப்படையில், விமானங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் நேற்று இரண்டாவது நாளாக, இதுவரையில் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள கனமழை எச்சரிக்கை காரணமாக, பயணிகள் பலர் தங்களுடைய விமான பயணங்களை ரத்து செய்து விட்டதால், நேற்று சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே உள்ளது.

இதனால் சென்னை விமான நிலையத்தில் நேற்று போதிய பயணிகள் இல்லாமல் பெங்களூரு, அந்தமான், டெல்லி, மஸ்கட் ஆகிய 4 புறப்பாடு விமானங்களும், 4 வருகை விமானங்களும், மொத்தம் 8 விமானங்களும் இதுவரையில் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளன. பெங்களூவிலிருந்து இன்று காலை 7.05 மணிக்கு, சென்னைக்கு வேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், பகல் ஒரு மணிக்கு அந்தமானிலிருந்து சென்னை வரவேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மாலை 3.20 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்,

நெற்று அதிகாலை ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து சென்னை வர வேண்டிய ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 4 வருகை விமானங்கள், அதைப்போல் சென்னையில் இருந்து நேற்று காலை 7.45 மணிக்கு அந்தமான் செல்ல வேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பகல் 1.40 மணிக்கு, பெங்களூரு செல்ல வேண்டிய ஆகாஷா பயணிகள் விமானம், காலை 8.40 மணிக்கு சென்னையில் இருந்து ஓமன் தலைநகர் மஸ்கட் செல்ல வேண்டிய ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று மாலை சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 4 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த விமானங்கள் தவிர மற்ற விமானங்கள் அனைத்தும் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. ஆனாலும் விமான நேரங்களில் மாற்றங்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதால், பயணிகள் அனைவரும் தாங்கள் பயணம் செய்யும் விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு, விமானங்கள் புறப்படும் நேரங்களை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் தங்கள் பயணங்களை அமைத்துக் கொள்ளும்படி சென்னை விமான நிலையம் பயணிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

The post போதிய பயணிகள் இல்லாததால் 8 விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bengaluru ,Andaman ,Delhi ,Muscat ,Chennai airport ,
× RELATED கனமழை எதிரொலி; போதிய பயணிகள்...