×

தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா தலமான ஏலகிரி மலையில் திரண்ட பொதுமக்கள்

*குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ச்சி

ஏலகிரி: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி மலையானது, தமிழ்நாட்டில் உள்ள ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போல் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இம்மலையானது ஏழைகளின் ஊட்டி எனவும், மலைகளின் இளவரசி எனவும் அழைக்கப்படுகிறது. ஏலகிரி மலையானது பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜோலார்பேட்டை அருகே உயர்ந்த மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள மலைப்பாதை 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. எனவே, இம்மலைக்கு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும், ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏலகிரி மலையில் படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, சாகச விளையாட்டு தளங்கள், பறவைகள் சரணாலயம், மூலிகை பண்ணை, மங்கலம் சுவாமி மலை ஏற்றம், தாமரைக்குளம், கதவநாச்சியம்மன் கோயில், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் ஏலகிரி மலையில் அமைந்துள்ளன.
இந்நிலையில், ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் ஞாயிறுக்கிழமை என தொடர் விடுமுறை காரணமாக கடந்த 3 நாட்களாக ஏலகிரி மலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். அங்குள்ள படகு இல்லத்தில் குடும்பத்துடனும், நண்பர்களோடும் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

மேலும், இயற்கை பூங்காவில் பூக்களை ரசித்தும், புல் தரையின் மீது அமர்ந்தும் பொழுதுபோக்கினர். இதுதவிர, பறவைகள் சரணாலயத்தில் செல்லப் பிராணிகளுக்கு உணவு கொடுத்தும், செல்பி பாண்டா பார்க்கில் செல்பி எடுத்தும், குழந்தைகள் சாக்லேட் உற்பத்தி செய்தும் மகிழ்ந்தனர். அதேபோல், சாகச விளையாட்டு தளத்தில் குழந்தைகள் படகு சவாரி செய்தும், வில்லம்பு எய்தும் உற்சாகமாக இருந்தனர். கடந்த 3 நாட்களாக ஏலகிரி மலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் தங்குவதற்கு இடம் இன்றி சிலர் அவதிக்குள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா தலமான ஏலகிரி மலையில் திரண்ட பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Elagiri hill ,Elagiri ,Jollarpet, Tirupattur district ,Ooty ,Kodaikanal ,Yercaud ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் தொடர்...