×

நவ.16ல் மண்டலகால பூஜை தொடக்கம் சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் நவம்பர் 16ல் தொடங்கும் மண்டல, மகர விளக்கு பூஜை நேரத்தில் தரிசனத்திற்கு உடனடி முன்பதிவு வசதி கிடையாது என்றும், ஆன்லைனில் தான் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான மண்டல கால பூஜை நவம்பர் 16ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி நவம்பர் 15ம் தேதி கோயில் நடை திறக்கப்படுகிறது.

இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆலோசனைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதன்பின் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் அளித்த பேட்டியில், ‘‘சபரிமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்தால் தேவசம் போர்டுக்கு லாபம் தான் என்றாலும் பக்தர்களின் நலன் கருதி தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவை கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு பக்தர்கள் பல பாதைகளில் வருவார்கள். அவர்கள் அனைவரின் விவரங்களையும் சேகரிக்க வேண்டியது அவசியம் என்பதால் தான் ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்படுகிறது. ஆனாலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் யாருக்கும் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படாது. உடனடி முன்பதிவு வசதி தேவைப்பட்டால் பின்னர் இது குறித்து அரசுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இது தொடர்பாக அரசு தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்’’ என்றார். சபரிமலை தரிசனத்திற்கு www.sabarimalaonline.org என்ற இணையதளம் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும்.

The post நவ.16ல் மண்டலகால பூஜை தொடக்கம் சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Mandala Puja ,Thiruvananthapuram ,Travancore ,Devasam ,Board ,President ,Prashanth ,Mandal ,Makara Lampu Puja ,Sabarimalai… ,
× RELATED சபரிமலை கோயில் மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வு