×

ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு துணை முதல்வர் நேரில் ஆறுதல்

சென்னை: கவரப்பேட்டை அருகில் நடைபெற்ற ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், கவரப்பேட்டை அருகில் லூப் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது நேற்று முன்தினம் இரவு பாக்மதி அதிவிரைவு பயணிகள் ரயில் மோதியது. இதில் 19 பேர் காயமடைந்துள்ளனர். தகவல் அறிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், கும்மிடிபூண்டி எம்எல்ஏ, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். ரயிலில் சுமார் 1,600 பேர் பயணம் செய்ததாக தெரியவருகிறது. சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் சேதமடைந்தது.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த 19 பேர் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களில் மூன்று பேர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், காயமடைந்த 4 பயணிகள் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். முதல்வர் உத்தரவின்பேரில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேரில் சென்று, காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்திட மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், விபத்து நடந்த இடத்தில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ள விவரம், அவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கான மாற்று ஏற்பாடு, உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் குறித்து கேட்டறிந்து அவற்றை உரிய முறையில் செய்து தரப்பட மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார். விபத்து நடந்த இடத்தல் மீட்பு பணிகளுக்காக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3 தீயணைப்பு வாகனங்கள் வட மண்டல இணை இயக்குனர் தலைமையில் இரண்டு மாவட்ட அலுவலர்கள், மூன்று நிலைய அலுவலர்கள் மற்றும் 25 தீயணைப்பு வீரர்களுடன் துரிதமாக செயல்பட்டது. இதனால் விபத்து இடத்தில் ஏற்பட்ட தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டு இதர பெட்டிகளுக்கு தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. 28 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் 3 மருத்துவ குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

விபத்தினால் தங்கள் பயணத்தை தொடர முடியாத பயணிகள் 800க்கும் மேற்பட்டோர் கவரப்பேட்டையில் உள்ள கல்யாண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு மற்றும் இதர வசதிகள் செய்து தரப்பட்டதுடன், திருமண மண்டபங்களில் இருந்து பொன்னேரி ரயில் நிலையத்திற்கு 20க்கும் மேற்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் மூலம் அழைத்து செல்லப்பட்டு, சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். ரயில் விபத்தில் உரிய மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படாமல், காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்ததுடன், பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவருக்கும் தேவையான உதவிகள் வழங்கியதற்காக தமிழ்நாடு அரசுக்கு பயணிகள் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

The post ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு துணை முதல்வர் நேரில் ஆறுதல் appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,CHENNAI ,Udhayanidhi Stalin ,Kavarappat ,Kavarappet ,Kummidipoondi circle ,Tiruvallur district ,Dinakaran ,
× RELATED என்னை இழிவு செய்வதாக நினைக்கும்...