×
Saravana Stores

கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் சரக்குரயில் மீது பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில், சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. மைசூரில் இருந்து தர்பங்கா செல்லும் பாக்மதி அதிவிரைவு ரயில் (12578) கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே விபத்து ஏற்பட்டுள்ளது. 75 கி.மீ. வேகத்தில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், ஏற்கனவே லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்னால் மோதியது. பயணிகள் ரயிலின் எஞ்சினுக்கு பின்னால் இருந்த, பவர் பாக்ஸுடன் கூடிய சரக்குகள் வைக்கும் பெட்டியில் தீப்பிடித்தது.

சரக்கு ரயிலின் பெட்டிகள் கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், பயணிகள் ரயிலின் 13 பெட்டிகள் தடம்புரண்டன. மூன்று பெட்டிகள் பக்கவாட்டில் சாய்ந்த நிலையில், 2 பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்று ஏறி உருக்குலைந்தன. ரயில் விபத்து நடந்த இடத்தில் அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், ரயில் பெட்டியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

பெரம்பூரில் நேற்றிரவு 7.30 மணிக்கு புறப்பட்ட பாகமதி எக்ஸ்பிரஸ், 8.27 மணிக்கு பொன்னேரி ரயில் நிலையத்தை கடந்தது. கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில், பாகமதி எக்ஸ்பிரஸூக்கு நிறுத்தம் கிடையாது, ரயில் மெயின் லைன் வழியே செல்ல வேண்டும். பாகமதி எக்ஸ்பிரஸ் மெயின் லைன் வழியே செல்லும் வகையில் கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டதாக ரயில்வே தரப்பில் தகவல் தெரிவித்துள்ளது. ரயில் மெயின் லைனில் செல்வதற்கு பதிலாக லூப் லைனில் சென்றது; லூப் லைனில் சரக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. லூப் லைனில் சென்ற பாகமதி எக்ஸ்பிரஸ், சரக்கு ரயிலின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்து நடைபெற்ற இடத்துக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மீட்பு பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வருகின்றனர். 22-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது. மீட்கப்பட்ட பயணிகள் அருகில் உள்ள கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்னர்.

கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில், நிகழ்ந்த ரயில் விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட 1,800-க்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்

ரயில் விபத்து நடந்த இடத்தில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உருக்குலைந்த ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ரயில் விபத்தில், 13 பெட்டிகள் தடம்புரண்டதால் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்

உதவி எண்: இந்த ரயிலில் சென்ற பயணிகள் தொடர்பாக தகவல் விவரம் அறியும் விதமாக, உதவி எண்ணை( 044-25354151, 044-2435499) ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விபத்து காரணமாக கும்மிடிப்பூண்டி வழியாக செல்லும் 18 வகையான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் சரக்குரயில் மீது பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து appeared first on Dinakaran.

Tags : Gawaripet train station ,THIRUVALLUR ,KAWARIPETTA RAILWAY STATION ,Mysore ,Darbhanga ,Kawaripettai railway station ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை...