×
Saravana Stores

தாம்பரம் விமானப்படை தளத்தில் சாகச நிகழ்ச்சிகள் நிறைவு இந்திய விமானப்படையின் சேவை உலக நாடுகளுக்கும் தேவைப்படுகிறது: விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் பேச்சு

சென்னை: இந்திய விமானப்படையின் சேவை, இந்தியாவில் மட்டும் அல்ல, வெளிநாட்டிலும் தற்போது தேவைப்படுகிறது. குறிப்பாக பேரிடர் காலங்களில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு நாங்கள் எப்போதும் முதன்மையாக இருப்போம் என இந்திய விமானப்படையின் தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் தெரிவித்துள்ளார். சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படையின் 92ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி இந்திய விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்வுகளும் மற்றும் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. இந்நிகழ்வில் இந்திய ராணுவத்தின் முப்படையின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் மற்றும் இந்திய விமானப்படையின் தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் உள்ளிட்ட முக்கிய ராணுவ உயர் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். முன்னதாக இந்திய விமானப்படை வீரர்கள் அணிவகுப்பில் ஈடுபடும்போது கடும் வெயிலின் தாக்கத்தால் 5 விமானப்படை வீரர்கள் மயக்கம் அடைந்தனர். பின்னர் அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டது. வெளிநாடுகளில் கப்பல்களை மீட்கும் பணிகளிலும், மற்ற நாடுகளுக்கு உதவி செய்வதிலும் இந்திய விமானப்படை சிறப்பாக பங்காற்றியுள்ளது.

இந்திய விமானப்படையின் சேவை இந்தியாவில் மட்டும் அல்ல வெளிநாட்டிலும் தற்போது தேவைப்படுகிறது. குறிப்பாக பேரிடர் காலங்களில் நிவாரணம் ஆகியவற்றிற்கு நாங்கள் எப்போதும் முதன்மையாக இருப்போம். இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு நிறைவு விழாவை நடத்த உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார். பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த சாகசங்கள்: விமானப்படையின் மூன்று சேத்தக் விமானம், இந்திய விமான படையின் கொடியை வானில் பறக்க விட்ட படி பறந்து அணி வகுப்பு நிகழ்ச்சி தொடங்கியது. 3 பிலாடஸ் பிசி-7 விமானம் வானில் பறந்து காட்சியளித்தது. சுகோய்-30 எம்கேஐ சோழா 950 கிமீ வேகத்தில் வானில் சீறி பாய்ந்தும் வானில் அதன் வேகத்தையும் திறன்களையும் பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்தியது. ஆசியாவிலேயே 9 விமானங்கள் கொண்ட சிறந்த விமான குழுவான சூரிய கிரண் குழுவினர், வானில் மூவர்ண கொடியை பிரதிபலிக்கும் வகையில் வண்ணங்களை வெளியிட்டு வானில் வட்டமிட்டும் இந்தியாவின் பலமான இந்திய இளைஞர்களை சுட்டிக்காட்டும் வகையில் ‘y‘ வடிவில் விமானத்தை இயக்கியும், இந்திய விமான படையை குறிக்கும் வகையில் ‘A’ வடிவிலும் விமானத்தை இயக்கியும், மேலும் இந்திய விமான படையின் ஒற்றுமையையும் திறன்களை பறைசாற்றும் வகையில் டி.என்.ஏ முறையில் வானில் விமானத்தை இயக்கி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

 

The post தாம்பரம் விமானப்படை தளத்தில் சாகச நிகழ்ச்சிகள் நிறைவு இந்திய விமானப்படையின் சேவை உலக நாடுகளுக்கும் தேவைப்படுகிறது: விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Air ,Force ,Base ,Indian Air Force ,Air Chief ,Marshal ,Amar Preet Singh ,CHENNAI ,India ,Air Marshal ,
× RELATED வெயிலில் மயங்கி விழுந்த இந்திய விமானப்படை வீரர்!!