×

தீபாவளி பண்டிகையையொட்டி கோ-ஆப்டெக்ஸில் சிறப்பு விற்பனை துவக்கம்

திருச்சி, அக்.2: கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30% சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த ஆண்டும் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள் மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள். தலையணை உறைகள், வேஷ்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாகத் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

திருச்சி பொதிகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2024 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை நேற்று நகரட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர். திருச்சி பொதிகை விற்பனை நிலையத்தில் தீபாவளி 2023ல் ரூ.193.38 லட்சங்கள் விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி 2024க்கு ரூ.235 லட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், ”கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம்’ என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 12 வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30% அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டு வருகிறது. கோ-ஆப்டெக்ஸில் மின் வணிக விற்பனை நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர்கள் www.cooptex.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விருப்பத்திற்கேற்ப ரகங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் நாகராஜன், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (கூடுதல் பொறுப்பு) மேலாளர் அய்யப்பன், அரசு அலுவலர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை திருச்சி பொதிகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் சங்கர், சிறப்பாக செய்திருந்தார்.

The post தீபாவளி பண்டிகையையொட்டி கோ-ஆப்டெக்ஸில் சிறப்பு விற்பனை துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Co-Optex ,Diwali ,Trichy ,Tamil Nadu Government ,
× RELATED செல்போன் பறித்த ரவுடி கைது