×

ஜாபர் சேட் வழக்கு விவகாரத்தில் ஐகோர்ட் நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்: மனு ஏற்கப்பட்டபிறகு அதை தள்ளுபடி செய்ய சட்டத்தில் இடமில்லை

புதுடெல்லி: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் மீதான வழக்கு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் செயலுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஜாபர் சேட் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் சங்கர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு தடை விதித்து, அதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

அதேப்போன்று இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இதையடுத்து அதனை ஏற்பதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், ஜாபர் சேட்டுக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்கவோ அல்லது தீர்ப்பு வழங்கவோ கூடாது என்று இடைக்கால தடை விதித்து கடந்த 6ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தில் முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்’’ ஜாபர் சேட்டின் முறையீடு அனுமதிக்கப்படுகிறது என்று வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். இதனை ஆய்வு செய்தபோது, நீதிபதி கூறியதை உயர்நீதிமன்ற பதிவாளர் தரப்பிலும் உறுதி செய்யப்பட்டது.

ஆனால் அதுசார்ந்த உத்தரவை வெளியிடாமல் அதே மாதம் 23ம் தேதி மீண்டும் விசாரணை நடத்தி ஜாபர் சேட்டின் மனுவை தள்ளுபடி செய்துள்ளீர்கள். அது ஏன் என்பது தான் தற்போது உச்ச நீதிமன்றத்தின் கேள்வியாக உள்ளது. குறிப்பாக சி.ஆர்.பி.சி சட்டத்தில் ஒரு உத்தரவை பிறப்பித்த பின்னர், மீண்டும் அதனை திரும்பப்பெற நீதிமன்றங்களுக்கு அனுமதி கிடையாது. எனவே ஜாபர் சேட் விவகாரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதிக்கு பின்னர் பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளும் செல்லத்தக்க ஒன்று கிடையாது என்று கண்டனத்துடன் தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post ஜாபர் சேட் வழக்கு விவகாரத்தில் ஐகோர்ட் நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்: மனு ஏற்கப்பட்டபிறகு அதை தள்ளுபடி செய்ய சட்டத்தில் இடமில்லை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,High Court ,Jaber Chet ,New Delhi ,Madras High Court ,Zafar Said ,Ram Shankar ,Jaber Sade ,ICourt ,Dinakaran ,
× RELATED ஜாபர் சேட் மீதான வழக்கை மீண்டும் விசாரிப்பது தவறு: உச்சநீதிமன்றம் அதிரடி