×

ஆந்திராவிலிருந்து அரக்கோணத்துக்கு பைக்கில் கடத்தி வந்த 30 கிலோ குட்கா புகையிலை பறிமுதல் : 3 வாலிபர்கள் கைது

திருத்தணி: தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தல், விற்பனையை தடுத்து நிறுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை திருத்தணி அருகே வள்ளியம்மாபுரம் பகுதியில் திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருத்தணியில் இருந்து அரக்கோணம் நோக்கி பைக்கில் சென்ற 3 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் சாக்குப்பையில் 30 கிலோ எடை கொண்ட குட்கா, புகையிலை பொருட்கள் கடத்தியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பைக் மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து 3 வாலிபர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள், அரக்கோணம் பழனிப்பேட்டையை சேர்ந்த சதீஷ் (23), ஜெய் கிஷோர் (21), இலுப்பைதண்டலத்தை சேர்ந்த சுமன் (23) என்பதும் ஆந்திர மாநிலம் நகரியில் குறைந்த விலைக்கு குட்கா புகையிலை பொருட்கள் வாங்கி அரக்கோணம் பகுதியில் கடைகளில் விற்பனைக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து 3 வாலிபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆந்திராவிலிருந்து அரக்கோணத்துக்கு பைக்கில் கடத்தி வந்த 30 கிலோ குட்கா புகையிலை பறிமுதல் : 3 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Andhra ,Arakkonam ,Thiruthani ,Tiruvallur District ,SB ,Tamil Nadu government ,Srinivasa Perumal ,Tiruthani ,Dinakaran ,
× RELATED போலி ஸ்டிக்கர் ஒட்டிய டூரிஸ்ட் வேன் பறிமுதல்: வாகன சோதனையில் சிக்கியது