×

உளவியல் ரீதியாக உடைந்துவிட்டார்; 56 அங்குல மார்பை பற்றி பெருமை பேசும் மோடி இப்போது இல்லை: காஷ்மீர் பிரசாரத்தில் ராகுல்காந்தி கடும் தாக்கு


சூரன்கோட்: தனது 56 அங்குல மார்பை பற்றி பெருமை பேசும் மோடி இப்போது இல்லை. அவர் உளவியல் ரீதியாக உடைந்துவிட்டார் என்று ராகுல்காந்தி கடுமையாக தாக்கி பேசினார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி நேற்று காஷ்மீரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். 2ம் கட்ட தேர்தல் நடைபெறும் சூரன்கோட், நகர் பகுதியில் அவர் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் மோடி உளவியல் ரீதியாக உடைந்துவிட்டார். அதற்கு முன்பு அவர் 56 அங்குல மார்பைப் பற்றி பெருமை பேசுவார். இப்போது அவர் அப்படி பேசும் அதே நபர் அல்ல. இன்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் செய்கின்றன. அவர்கள் மசோதாக்களைக் கொண்டு வருகிறார்கள். ஆனால் நாங்கள் அவர்களுக்கு தடையாக நிற்கிறோம். அவர்களால் அந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.

அதற்கு பதிலாக வேறு மசோதாவைக் கொண்டு வருகிறார்கள். நாங்கள் மோடியின் நம்பிக்கையை உடைத்துவிட்டோம். ஏனெனில் அவர் வைத்திருந்த சித்தாந்தத்தை நாங்கள் உடைத்ததால், அந்த வேதனை தற்போது மோடியின் முகத்தில் தெரியும். மக்களவை தேர்தல் பிரசாரத்தில் மோடிக்கு அழுத்தம் அதிகரித்தபோது, ​​அவர் தனது பிறப்பு உயிரியல் அல்ல என்றும் கடவுளுடன் நேரடி தொடர்பு இருப்பதாகவும் கூறினார். உளவியல் ரீதியாக அவர் அழுத்தத்தில் இருந்தது அப்போது அப்பட்டமாக தெரிந்தது. அது இந்தியா கூட்டணியால் தான். அவரை உளவியல் ரீதியாக நாங்கள் முடித்துவிட்டோம். அதுவும் வெறுப்பால் செய்யவில்லை, அவர்கள்தான் வெறுப்பை பரப்புகிறார்கள். நாங்கள் அன்பினால் செய்தோம்.

சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு உங்கள் மாநிலத்தை நீங்கள் மீண்டும் பெறுவீர்கள். முந்தைய அரசாங்கங்கள் உள்ளூர் மக்களால் நடத்தப்பட்டன. அவர்களின் முடிவுகள் உங்கள் சிறந்த எதிர்காலத்திற்காகவும் உங்கள் நலனுக்காகவும் இருந்தன. ஆனால் இன்று, வெளியாட்கள் உங்களுக்காக முடிவுகளை எடுக்கிறார்கள். உங்கள் ஆட்சியில் உங்கள் குரல் இல்லை. உங்கள் அரசாங்கம் டெல்லியில் இருந்து இயக்கப்படுகிறது. டெல்லியில் இருந்து உத்தரவு வருகிறது. உங்கள் அரசாங்கம் காஷ்மீரில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாடாளுமன்றத்தில் எந்தவொரு பிரச்னையையும் எழுப்ப மக்கள் தயங்காமல் என்னை அணுக வேண்டும். நான் உங்களுக்காக எப்போதும் தயாராக இருக்கிறேன். எனக்கு ஒரு உத்தரவு கொடுங்கள். உங்களுக்கு உதவ நான் இருக்கிறேன். இவ்வாறு பேசினார்.

The post உளவியல் ரீதியாக உடைந்துவிட்டார்; 56 அங்குல மார்பை பற்றி பெருமை பேசும் மோடி இப்போது இல்லை: காஷ்மீர் பிரசாரத்தில் ராகுல்காந்தி கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : MODI ,RAKULKANDHI ,PREACHER ,Surenkot ,Rakulganti ,Lok Sabha ,Kashmir ,Rakul Gandhi ,Dinakaran ,
× RELATED உத்தரகாண்டில் உள்ள பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்!