×

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்ய சுயசேவை இயந்திரம்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், சுயசேவை இயந்திரம் மூலம் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் திட்டத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் நெடுந்தூர பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யும் திட்டத்தை தமிழ்நாட்டு மக்களுக்காக கடந்த 2006ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் மென்மேலும் வளர்ச்சி பெற்று பயணிகளிடத்தில் வரவேற்பை பெற்றது.

இதன் அடுத்த கட்டமாக சுயசேவை இயந்திரம் (கியோஸ்க் சிஸ்டம்) மூலமாக முன்பதிவு செய்யும் திட்டத்தை போக்குவரத்துக் கழகம் அறிமுகம் செய்துள்ளது. இதனை சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்திற்கு தேவையான சுயசேவை இயந்திரம் முதல் கட்டமாக கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் வரவேற்பை பொறுத்து அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இத் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் அறிமுகப்படுத்திய இந்த நிகழ்வில், அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மோகன், பொது மேலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சுயசேவை திட்டத்தின் மூலம் பெறக்கூடிய வசதிகள் குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்த தகவல்கள்:
* சுயசேவை இயந்திரம் (கியோஸ்க் சிஸ்டம்) வழியாக, எந்த நேரத்திலும் தங்களுக்கு தேவையான பேருந்துகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

* பயணிகள் மின்னணு முறையில் கியூ.ஆர்.கோடு, கிரடிட் கார்டு, டெபிட் கார்டு வழியாக பயணச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

* இத் திட்டத்தின் மூலம் 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளலாம்.

* பயணிகள் தங்களுக்கு தேவையான பேருந்து வகை, புறப்படும் நேரம், இருக்கை எண் போன்றவற்றை விருப்பம் போல் தேர்வு செய்து கொள்ளலாம்.

* அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் நெடுந்தூர பேருந்துகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

* இத்திட்டத்தின் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

* இந்த திட்டத்திற்கு தேவையான சுயசேவை இயந்திரம் முதல் கட்டமாக கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் வரவேற்பை பொறுத்து அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இத் திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்ய சுயசேவை இயந்திரம்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Klambakkam ,Minister ,Sivashankar ,CHENNAI ,Transport Minister ,Government Rapid Transport Corporation ,Tamil Nadu Government Transport Corporation ,Sivasankar ,
× RELATED ஆன்லைன் பயணச்சீட்டு முன்பதிவு...