×

கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் தமிழக எல்லை வந்தடைந்தது: எம்எல்ஏ, அதிகாரிகள் மலர் தூவி வரவேற்பு

ஊத்துக்கோட்டை: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் நேற்று காலை தமிழக எல்லைக்கு வந்தடைந்தது. எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா – தமிழக அரசுகள் இடையே தெலுங்கு கங்கா நதிநீர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஆண்டுதோறும் ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும், சேதாரம் 3 டிஎம்சி என மொத்தம் 15 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்.

தற்போது கண்டலேறு அணையில் 18 டிஎம்சி தண்ணீர் இறுப்பு உள்ளது. தெலுங்கு கங்கா ஒப்பந்தப்படி 8 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் இருந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடலாம். மேலும் இந்த வருடம் ஜூலை மாதம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை ஆந்திர அரசு வழங்காத நிலையில், தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் தண்ணீர் திறக்க வேண்டும் என ஆந்திர அரசின் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு கடந்த 19ம் தேதி காலை 11 மணியளவில் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட்டது. பின்னர் படிப்படியாக உயர்த்தி 1200 கன அடியாகவும், நேற்று 1300 கன அடியாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர், இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் கடந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டை நேற்று காலை 9 மணிக்கு வந்தடைந்தது.

இந்த தண்ணீரை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், நீர்வளத்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் ஜானகி, செயற்பொறியாளர் தில்லைக்கரசி ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, எல்லாபுரம், பூண்டி திமுக ஒன்றிய செயலாளர்கள் சத்தியவேலு, சந்திரசேகர், பொன்னுசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லேகேஷ், கிருஷ்ணமூர்த்தி, பேரூர் செயலாளர் அபிராமி குமரவேல், பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத்தலைவர் குமரவேல்,

கார்த்திகேயன் உட்பட பலர் கலந்துகொண்டனர். தற்போது ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டில் வினாடிக்கு 195 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ணா கால்வாயில் ஏற்கெனவே மழை நீர் தேங்கி இருக்கிறது. இதனால் வழக்கத்தை விட வேகமாக கிருஷ்ணா நதி நீர் பூண்டி நீர்த்தேக்கத்தை அடைந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் தமிழக எல்லை வந்தடைந்தது: எம்எல்ஏ, அதிகாரிகள் மலர் தூவி வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Krishna ,Kandaleru dam ,Tamil Nadu border ,MLA ,Oothukottai ,Tamil Nadu ,Andhra ,Tamil Nadu governments ,Chennai ,
× RELATED கண்டலேறு அணையில் இருந்து...