×

வேலூர் பொன்னை ஆற்றின் ரயில்வே மேம்பாலத்தில் பழுதான தூண்கள் சீரமைப்பு: இன்று மாலை ரயில் சோதனை ஓட்டம்?

வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம் திருவலம் பொன்னையாற்றில் உள்ள 2 ரயில்வே மேம்பாலங்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. கடந்த மாதம் பெய்த கனமழையால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மேம்பாலத்தின் 38, 39வது தூண்களுக்கு இடையே பாலத்தில் விரிசல் ஏற்பட்டதை கடந்த 23ம்தேதி மாலை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தூண்களிலும் விரிசல் காணப்பட்டது. அன்று மாலை முதல் அவ்வழியாக வரும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டது. 34 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து விரிசல் ஏற்பட்ட பாலத்தை சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் மற்றும் ரயில்வே பொறியாளர்கள் நேற்று முன்தினம் மதியம் ஆய்வு செய்தனர். அப்போது, 39வது தூணின் அடிப்பகுதியில் வெள்ளத்தால் மணல் அரிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தூணின் அடிப்பகுதியில் இருபுறங்களிலும் நேற்று முன்தினம் இரவு சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைத்தனர். தொடர்ந்து, சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று மதியம் மேம்பாலத்தின் மற்ற தூண்களை ஆய்வு செய்தனர். அப்போது, 21, 22வது தூண்களுக்கு இடையிலும், 27, 28வது தூண்களுக்கு இடையிலும் பாலங்களின் அடியில் வெள்ளம் காரணமாக 10 அடிக்கும் மேலாக பள்ளங்கள் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மண் அரிப்பை சீரமைக்கும் பணி நடந்தது. இதில் தூண்களின் இருபக்கமும் அதிகளவிலான பாறைக்கற்கள், மணல் அடுக்கி வைத்து பள்ளம் சமன்படுத்தப்பட்டது. பின்னர் விரிசல் ஏற்பட்டு சீரமைக்கப்பட்ட 38வது தூணுக்கு இடையில் இரும்பு கர்டர்கள் வைத்து பாதுகாப்பு செய்யப்பட்டது. அதேபோல் 39வது தூணுக்கும் இடையில் நவீன இயந்திரங்கள் மூலம் இரும்பு கர்டர்கள் வைக்கும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இப்பணிகள் முடிந்ததும் இன்று மதியம் தனியார் ஏஜென்சி மூலம் பாலத்தின் உறுதி தன்னை சோதனை செய்யப்படும். அதன் அடிப்படையில் ரயில்கள் இயக்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். முன்னதாக ரயில் தண்டவாளம் தாங்கும் தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்படும். இந்த பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு இன்று மாலைக்குள் ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும் என்றனர். சோதனை ஓட்டத்தில் பாதிப்பு இல்லை என தெரிய வந்தால் அனைத்து ரயில்களும் வழக்கம் போல் இயக்கப்படும் என்றும், இந்த பாலத்தில் மட்டும் சிறிது நாட்கள் வரை ரயில்கள் குறைவான வேகத்தில் இயக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post வேலூர் பொன்னை ஆற்றின் ரயில்வே மேம்பாலத்தில் பழுதான தூண்கள் சீரமைப்பு: இன்று மாலை ரயில் சோதனை ஓட்டம்? appeared first on Dinakaran.

Tags : Vellore Ponnai ,Vellore ,Thiruvalam Ponnaiyar ,Vellore district ,Gadpadi circle ,
× RELATED வேலூர் அடுத்த மேல்மொணவூரில் தேசிய...