×

அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில் திருப்பூரில் திருக்குறள் இசை நாடக வடிவிலான நிகழ்ச்சிகளுடன் பரிசளிப்புப் பெருவிழா..!!

சென்னை: செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில் திருப்பூரில் திருக்குறள் இசை நாடக வடிவிலான நிகழ்ச்சிகளுடன் பரிசளிப்புப் பெருவிழா நடைபெற்றது. உலக நாகரிகத்திற்குத் தமிழினத்தின் பங்களிப்புகள் பல, அவற்றுள் இரண்டைக் குறிப்பிட்டுச் சொல்லலாம், ஒன்று தமிழிசை, மற்றொன்று திருக்குறள், தமிழில் மிகச் சில சொற்களில் ஆன கவிதை வடிவம் குறள் வெண்பா ஆகும். மிக விரிந்த உலகச் சிந்தனைகளை மிகக் குறுகிய வடிவத்தில் தரமுடியும் என்பதை உலக இலக்கிய அரங்கில் முதலில் திருவள்ளுவரே செய்து காட்டினார் எனலாம்.

திருவள்ளுவர் சின்னக் குழந்தையின் சிரிப்பு முதல் மெய்யுணர்தல் வரை மண்ணுக்கும் விண்ணுக்கும் சிந்தனைகளைத் தம் அளவிற்சிறிய குறளில் பொதிந்து வைத்துள்ளார். இத்தகைய திருக்குறளின் சிறப்புகள் ஏட்டளவில் நின்றுவிடாமல் மாணவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கேதுவாக திருக்குறளை மையமாகக் கொண்டு கலைவளர்மணி ராஜ்குமார் குழுவினரின் கிராமியக் கலை நிகழ்ச்சிகள், வில்லிசை, நாட்டுப்புறப் பாடல்கள், மேகலா கலைக்குழு வழங்கும் முத்தமிழறிஞர் கலைஞரின் குறளோவியம் நாடகம் மற்றும் கலைமாமணி ஜாகீர்உசேன் குழுவினரின் பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை இயல் இசை நாடக மன்றம், திருப்பூர் தமிழ்ச் சங்கம், திருப்பூர் இந்திய மருத்துவச் சங்கம் ஆகியவற்றுடன் தமிழ் வளர்ச்சித் துறை இணைந்து நடத்தப்பெறவுள்ளது.

நிகழ்ச்சிகளின் மணிமுடியாய் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினைச் சிறப்பிக்கும் நோக்கில் முத்தமிழறிஞர் கலைஞர் தீட்டிய கவிதைச் சித்திரமாம் குறளோவியம் மூன்றாம் தமிழாய் முகிழ்த்து முத்திரை பதிக்கவுள்ளது. ஈரடியால் உலகளந்து வான்புகழ் கொண்ட வள்ளுவப் பெருந்தகையின் வளத்தக்க சிந்தனைகளை வாழ்வியல் சூழலோடு இணைத்து வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஓர் அற்புதத் திருவிழாவாக இந்நிகழ்ச்சி 12.09.2024 (வியாழக்கிழமை) அன்று பிற்பகல் 3.30 மணிக்கு திருப்பூர் மாவட்டம் இந்திய மருத்துவக் கழகம்,
மரு. முருகநாதன் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்துகொண்டு விழாப்பேருரை ஆற்றவுள்ளார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் நா. கயல்விழி செல்வராஜ் விழாச்சிறப்புரையும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திரு. தா. கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையுரையும் ஆற்றவுள்ளனர். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் / செயலர் விஜயா தாயன்பன், திருப்பூர் தமிழ்ச் சங்கத் தலைவர் மரு. முருகநாதன், இந்திய மருத்துவக் கழகத் தலைவர் மரு. பாண்டியராஜன், திருப்பூர் தமிழ்ச் சங்க செயலாளர் . மோகன் கார்த்தி மற்றும் இந்திய மருத்துவக் கழகச் செயலாளர் மரு. ஆனந்த் ஆகியோர்கள் சிறப்புரை ஆற்றவுள்ளனர்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துரை வழங்கவுள்ளனர். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் வரவேற்புரையும் திருப்பூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் பெ. இளங்கோ நன்றியுரையும் ஆற்றவுள்ளனர். ஏழிசையும் பல்கலையும் கலந்து மணக்கும் இத்தமிழ்க் கலை விழாவில் பொற்குடத்திற்குப் பொட்டு வைத்தாற்போல தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரால், திருக்குறள் முற்றோதலில் வெற்றி பெற்ற சென்னை (9), திருவள்ளூர் (15), காஞ்சிபுரம் (11), வேலூர் (1), திருவண்ணாமலை (6), விழுப்புரம் (7), அரியலூர் (4), கடலூர் (1), சேலம் (1), நாமக்கல் (5), ஈரோடு (3), கரூர் (1), கோயம்புத்தூர் (4), திருப்பூர் (1), நீலகிரி (1), திருச்சிராப்பள்ளி (1), சிவகங்கை ,

தஞ்சாவூர் (12), திருவாரூர் (2), நாகப்பட்டினம் (9), மதுரை (3), திண்டுக்கல் (1), தேனி (5), இராமநாதபுரம் (1), விருதுநகர் திருநெல்வேலி (2), தூத்துக்குடி (1), கன்னியாகுமரி (4), செங்கற்பட்டு (13), இராணிப்பேட்டை (4), தென்காசி (2), மயிலாடுதுறை (1), ஆகிய 32 மாவட்டங்களைச் சேர்ந்த 147 பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத்தொகையாக ரூ.15000/-க்கான காசோலையும் பாராட்டுச்சான்றிதழும் மற்றும் தமிழறிஞர்களுக்கு கேடயமும் வழங்கப்படவுள்ளன. தமிழ்மீதும் திருக்குறள்மீதும் தீராப்பற்று கொண்ட மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையிலும், அய்யன் திருவள்ளுவரின் பெருமையைப் பறைசாற்றும் வகையிலும் இந்நிகழ்ச்சிகள் அமையவுள்ளன.

The post அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில் திருப்பூரில் திருக்குறள் இசை நாடக வடிவிலான நிகழ்ச்சிகளுடன் பரிசளிப்புப் பெருவிழா..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Saminathan ,Tirupur ,CHENNAI ,Information ,Thirukkural ,Tamils ,
× RELATED சென்னையில் புதிய படப்பிடிப்பு...