×

‘நீ இல்லாத உலகத்தில் என்னால் வாழ முடியாது’ காதலிக்கு இன்று திருமணம் சுடுகாட்டில் காதலன் தற்கொலை: மதுவில் விஷம் கலந்து குடிக்கும் வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பி உயிரை விட்டார்

மன்னார்குடி: திருவாரூர் அருகே வேறு நபருடன் காதலிக்கு இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில், மதுவில் விஷம் கலந்து குடித்து நண்பர்கள், உறவினர்களுக்கு வீடியோ அனுப்பிவிட்டு காதலன் தற்கொலை செய்து கொண்டார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி செருமங்கலம் சுடுகாடு அருகே நேற்று முன்தினம் இரவு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக வடூவூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சென்று பார்த்தனர். வாலிபர் சடலம் அருகில் மதுபாட்டிலும், அவரது நெஞ்சில் பூச்சிமருந்து டப்பாவும் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார், வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த மேலபுள்ளான் விடுதியை சேர்ந்த கணேசன் (23) என்பதும், கறிக்கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இவர், அந்த பகுதியை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதற்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு எழுந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பெண்ணும் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார். இதுபற்றி தெரிய வந்த கணேசன் மனஉளைச்சலில் இருந்து வந்தார். இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் முடித்தனர். அந்த பெண்ணுக்கு இன்று (5ம்தேதி) காலை திருமணம் நடக்கவுள்ளது. இந்நிலையில் மன்னார்குடியில் உள்ள தனது அக்காவை பார்ப்பதற்காக கணேசன் நேற்றுமுன்தினம் மாலை பைக்கில் சென்றார். அப்போது மன்னார்குடி செருமங்கலத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கி கொண்டு மன்னார்குடி செருமங்கலம் சுடுகாடு அருகே உட்கார்ந்து மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்துள்ளார். இதை தனது செல்போனில் கணேசன் வீடியோ எடுத்துள்ளார்.

அந்த வீடியோவில், ‘‘ உயிருக்கு உயிராக காதலித்த காதலிக்கு நான் உயிருடன் இருக்கும் போதே வேறு ஒரு நபருடன் திருமணம் நடக்க இருப்பதால் என்னால் அதை தாங்கி கொள்ள முடியாது. நீ இல்லாத உலகத்தில் என்னால் வாழ முடியாது. நான் உனக்கு தொந்தரவு கொடுத்து விட்டேன், எங்கிருந்தாலும் நீ நலமுடன் வாழ வேண்டும், உன் பிரிவை என்னால் தாங்க முடியாது, இதனால் இந்த துயர முடிவை எடுக்கிறேன்’’ என பேசி உள்ளார். பின்னர் அந்த வீடியோவை தனது அண்ணன், அக்கா, உறவினர்கள், நண்பர்களின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி விட்டு சிறிது நேரத்தில் கணேசன் இறந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வடுவூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். காதலிக்கு வேறு நபருடன் திருமணம் நடக்க இருப்பதை அறிந்து வேதனையில் காதலன் மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post ‘நீ இல்லாத உலகத்தில் என்னால் வாழ முடியாது’ காதலிக்கு இன்று திருமணம் சுடுகாட்டில் காதலன் தற்கொலை: மதுவில் விஷம் கலந்து குடிக்கும் வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பி உயிரை விட்டார் appeared first on Dinakaran.

Tags : Mannargudi ,Thiruvarur ,Thiruvarur District ,Mannargudi Serumangalam crematorium ,
× RELATED திருவாரூர் மாவட்டம்...