×

காவிரியில் இருந்து அதிக திறன் கொண்ட மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் எடுத்ததை எதிர்த்து வழக்கு: எடப்பாடி பழனிச்சாமி மற்றும் உறவினர்களுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: காவிரியில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர், அதிக குதிரை திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்த அனுமதி வழங்கி 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசு, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 31 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம், நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், காவிரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் எடுக்க ஏதுவாக, நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கம் என்ற சங்கம் தொடங்கப்பட்டது. மேட்டூர் இடதுகரை பாசன கால்வாய் ஆயக்கட்டுதாரர்களான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் 18 பேர் சங்கத்தில் சேர்க்கப்பட்டனர்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, கூடுதல் குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்த அனுமதி வழங்கி கடந்த 2020ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சேலம், வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், சங்கத்தில் சேர்க்கப்பட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர், 5 குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்த மட்டுமே முடியும் என்ற நிலையில், 27 குதிரைத் திறன் கொண்ட மின்மோட்டார்களை பயன்படுத்த சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்பட்டது. முன்னாள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எவ்வளவு தண்ணீர் காவிரியில் இருந்து எடுக்கப்படுகிறது என்பதை அளவிட எந்த மீட்டரும் இல்லாமல், தொடர்ச்சியாக தண்ணீர் எடுக்கப்பட்டுப்பட்டுள்ளது.இதுசம்பந்தமாக 2023ம் ஆண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கத்தினர் காவிரியில் இருந்து தண்ணீர் எடுப்பதை மீட்டர் பொருத்தி, கண்காணித்து முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வு, தமிழக அரசு, எடப்பாடி பழனிச்சாமி, அவரது உறவினர்கள் உள்பட 31 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளது.

The post காவிரியில் இருந்து அதிக திறன் கொண்ட மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் எடுத்ததை எதிர்த்து வழக்கு: எடப்பாடி பழனிச்சாமி மற்றும் உறவினர்களுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Edappadi Palanichami ,Chennai ,Former ,Chief Minister ,AIADMK ,Dinakaran ,
× RELATED தமிழகம் முழுவதும் சிறப்பு குழு...