×

மதுரவாயல் அருகே பயங்கரம் தறிகெட்டு ஓடிய மாநகர பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி, 30 பேர் காயம்: தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

பூந்தமல்லி: தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். பேருந்தில் வந்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். சென்னையை அடுத்த செங்குன்றத்தில் இருந்து தாம்பரம் நோக்கி தடம் எண் 104 என்ற மாநகரப் பேருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று தாம்பரம் நோக்கி சென்றுகொண்டிருந்தது.

பேருந்தை டிரைவர் ஆரோக்கியராஜேஷ் ஓட்டி வந்தார். சரவணன் என்ற நடத்துநர் பயணிகளுக்கு பயணச்சீட்டு கொடுத்து வந்துள்ளார். இந்த பேருந்து தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் மதுரவாயல் அடுத்த வானகரம், ஓடமா நகர் அருகே நேற்று பிற்பகலில் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி அப்பேருந்து சாலையோரத்தில் இருந்த இரும்பு தடுப்புகளை உடைத்துக் கொண்டு பைபாஸ் சாலையிலிருந்து வேகமாக இறங்கி சர்வீஸ் சாலையில் தறிகெட்டு ஓடியது.

அப்போது சர்வீஸ் சாலையில் எதிர்திசையில் வந்த ஆட்டோ மீது பேருந்து பயங்கரமாக மோதியது. மேலும் சிறிது தூரம் அந்த ஆட்டோவை பேருந்து இழுத்துச் சென்று நின்றது. இந்த கோர விபத்தில் ஆட்டோ அப்பளம்போல் நொறுங்கியது. ஆட்டோவை ஓட்டி வந்த மாதவரத்தைச் சேர்ந்த டிரைவர் தினேஷ் (45) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்தவர்களை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலை மற்றும் சர்வீஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் மதுரவாயல் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்துபோன ஆட்டோ டிரைவர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் ஆட்டோ மீது பேருந்து மோதவில்லையென்றால் அந்த பகுதியில் இருந்த கடைகளுக்குள் பேருந்து புகுந்து பேராபத்து ஏற்பட்டிருக்கும். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகமாக செல்லக்கூடிய அந்த சாலையில், இந்த விபத்து சிறிதுநேரம் கழித்து நிகழ்ந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்தில் இருந்த பேருந்து மற்றும் ஆட்டோவை கிரேன் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுரவாயல் கணபதி எம்எல்ஏ சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு பேருந்து நடத்துநர் ஆகியோரிடம் கேட்டறிந்தார். மேலும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஆறுதல் கூறி உரிய சிகிச்சை அளிக்க கேட்டுக் கொண்டார்.

The post மதுரவாயல் அருகே பயங்கரம் தறிகெட்டு ஓடிய மாநகர பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி, 30 பேர் காயம்: தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Maduravayal ,Thambaram-Maduravayal bypass ,Poontamalli ,Tambaram-Maduravayal Bypass ,Thambaram-Maduravayal ,Dinakaran ,
× RELATED தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில்...