×

பருவமழைக் காலங்களில் மழைநீரை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: விவசாயிகளுக்கு வேளாண்துறை ஆலோசனை

தேனி: பருவ மழைக்காலங்களில் கிடைக்கும் மழைநீரை பயன்படுத்தும் வழிமுறை குறித்து வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாகுபடியில் உள்ள பயிர்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் வைக்கோல் அல்லது தென்னை நார் கழிவு போன்றவைகளை நிலப் போர்வையாக இருக்குமாறு நன்கு தூவிவிட்டு, சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக பூமியில் படுவதை தடுக்கலாம். இம்முறையில் நீர்பாய்ச்சப்பட்ட நிலங்களில் நீர் ஆவியாவதை தடுப்பது மட்டுமில்லாமல் களை வளர்வதையும் கட்டுப்படுத்தலாம். கோடையில் சாகுபடி செய்யப்பட்ட இறவை மக்காச்சோளம், பயறு வகைகளில் மேற்கண்டபடி மூடாக்கு போடுவதாலும், நீர்தேவை அறிந்து நீர்ப்பாய்ச்சுவதாலும், மகசூல்
இழப்பை குறைக்கலாம். மேலும், மாலை நேரங்களில் நீர் பாய்ச்சும் பணியினை செய்து நீண்ட நேரம் வரை மண் ஈரம் காத்து வறண்ட சூழலிலிருந்து பயிரைக் காக்கலாம்.

நிலச்சரிவிற்கு குறுக்கே ஆழச்சால் அகலப்பாத்தி முறையினை கடைபிடித்து சாகுபடி மேற்கொள்ளலாம். கோடை மழை கிடைக்கும்போது சரிவிற்கு குறுக்கே மழைநீரை வழிந்தோடச் செய்வதன் மூலம் நிலத்தின் ஈரத்தன்மையை அதிகப்படுத்தலாம். மேலும், நீர்ப்பாய்ச்சும்போது கூட மண் ஈரம், நீண்ட நேரம் காத்திட இம்முறை மிகவும் ஏற்றதாக இருக்கும். இருக்கும் குறைந்த நீரைக் கொண்டு மரப்பயிர்களைக் காத்திடவும், சாகுபடி செய்யப்பட்ட கரும்பு போன்ற பயிர்களைக் காத்திடவும் சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசன முறைகளைக் கடைபிடிக்கும்போது வறட்சியிலிருந்து விடுபட ஏதுவாக இருக்கும்.

ஆழச்சால் அகலப்பாத்தியில் நீர்ப்பாய்ச்சும்போது ஒரு வரப்புவிட்டு மறு வரப்பிற்கு நீர்ப்பாய்ச்சும் முறையில் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வறட்சியை ஓரளவு சமாளிக்கலாம். முருங்கை சாகுபடியில் ஊடுபயிராக நிலக்கடலை, உளுந்து அல்லது வெங்காயம் போன்ற பயிர்களை சாகுபடி செய்தலில் உள்ள நீர் மேலாண்மையால் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். வரப்பு பயிராக ஆமணக்கு பயிரடலாம். கோடையில் சாகுபடியில் உள்ள பயிர்களுக்கு இலைவழித்தெளிப்பு உரம் மற்றும் சொட்டு நீர்ப்பாசனத்தில் நீரில் கரையும் உரப் பயன்பாடு கடைபிடித்தலால் நல்ல பயன் தரும். பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாலை நேரத்தில் கடைபிடிப்பது நல்லது. காலையில் வெயில் தாழும் வரையிலும், மாலை வெயிலின் தாக்கம் குறைந்த நேரத்திலும் விவசாயப் பணிகளாகிய களையெடுத்தல், மருந்து தெளித்தல், உரமிடல் போன்ற பணிகளை மேற்கொள்வதால் விவசாயிகள் உடல் ஆரோக்கியம் காக்கவும், நேரடி சூரிய கதிர்வீச்சுத் தாக்குதலைத் தவிர்க்கவும் செய்யலாம். கடும் வெயில் நேரங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமலும், மர நிழல் உள்ள பகுதிகளில் கால்நடைகள் தண்ணீர் குடிக்கவும் ஏற்பாடுகள் செய்யலாம். இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு விவசாயிகள் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாமென வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் என்ன?: மழைக்காலத்தில் பயிர்களில் தோன்றும் நோய்களான வாடல், வேரழுகல் தண்டமுகல் மற்றும் பியூசேரியம். ரைசக்டோனியா ஸ்கிளிரோசியம் ஆகிய பூஞ்சாணங்களை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். வேதியியல் முறையில் கார்பன்டசிம் மருந்தை 1 கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து விதைநேர்த்தி செய்து விதைக்கலாம். மேலும் கார்பன்டசிம் (பெவிஸ்டின்) மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து பாதிக்கப்பட்ட செடிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள செடிகளின் தூர்களில் ஊற்றி மண் மூலம் தோன்றும் நோய்களான வாடல் மற்றும் வேரழுகலை கட்டுப்படுத்தலாம். மேன்கோசெப் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு லிட்டருக்கு 2 கிராம் தெளித்து இலை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தலாம். ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் லிட்டர் தண்ணீருக்கு 0.5 கிராம் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 1 லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிராம் மருந்தை கலந்து தெளிப்பதின் மூலம் பாக்டீரியாவால் தோன்றும் நோய்களை கட்டுப்படுத்தலாம். அவ்வப்போது வயலைப் பார்வையிட்டு நோயுற்ற செடிகளை பிடுங்கி எரித்து விடவேண்டும்.

நோயுற்ற நாற்றுக்களை நடுவதற்கு பயன்படுத்தக்கூடாது. மேலும் அளவான தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் அதிகமாண சாம்பல்சத்து அளிப்பதன் மூலம் நோய் தாக்கத்தை குறைக்கலாம்.உயிரியல் முறையில் பருத்தி, பயறுவகைகள், எண்ணெய் வித்துப்பயிர்கள், காய்கறிகள், மலர்கள் மற்றும் பழப்பயிர்கள் ஆகியவற்றில் நோய்களை கட்டுப்படுத்த 2.5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி அல்லது பேசில்லஸினை 50 கிலோ மக்கிய உரத்துடன் கலந்து 10-15 நாட்கள் நிழலில் வைத்திருந்து இடுவதின் மூலம் வேரழுகலையும், வாடல் நோய்களையும் கட்டுப்படுத்தலாம். வேப்பம் புண்ணாக்கு எக்டருக்கு 250 கிலோ இடும்போது மண்ணில் தோன்றும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது. மேற்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி பயிர்களில் நோயை கட்டுபடுத்தி விளைச்சலை அதிகரிக்குமாறு வேளாண்மை துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

The post பருவமழைக் காலங்களில் மழைநீரை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: விவசாயிகளுக்கு வேளாண்துறை ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Theni ,Department of Agriculture ,
× RELATED தேனி மாவட்டம் முழுவதும் அண்ணா பிறந்தநாள் விழா உற்சாக கொண்டாட்டம்