×

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஏரல் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் அதிகாரிகளுடன் கலெக்டர் நேரில் ஆய்வு

வைகுண்டம், ஆக.29: ஏரல் தாலுகா பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்படி கலெக்டர் இளம்பகவத் பல்வேறு ஆய்வு பணிகளை செய்து வருகிறார். ஆய்வின்போது, குரங்கணி புறவழிச்சாலையில் புதிதாக போடப்பட்ட தார் சாலை பெயர்த்து எடுத்து அதன் தரம் குறித்து ஆய்வு செய்து நெடுஞ்சாலை துறையினரிடம் கேட்டறிந்தார்.

பின்னர், மாவடிப்பண்ணை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற கலெக்டர், மாணவ மாணவிகளுக்கு அளிக்கப்படும் சத்துணவை சாப்பிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சத்துணவு சமைக்க பயன்படும் அரிசி கணக்கில் உள்ள இருப்பைவிட கூடுதலாக இருந்தது. அதனை முன் இருப்பு என்று கணக்கில் வரவு வைப்பதுடன் மாணவ மாணவிகளுக்கு அளிக்கப்படும் சத்துணவு இன்னும் கூடுதல் சுவையுடன் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

பின்னர், ரூ.1 கோடியில் தென்திருப்பேரையில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தையும், ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார ஆய்வகக்கூடத்தையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். உள் நோயாளிகள் பிரிவில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். அதன்பிறகு வெள்ளரிக்காயூரணியில் உள்ள குளத்தில் புதிதாக கட்டப்பட்ட மதகுகளை பார்வையிட்டார். தொடர்ந்து வெள்ளமடத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பயிர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பாக மருந்துகளை கையாளுதல் தொடர்பாக நடந்த கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசினார்.

ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, ஏரல் தாசில்தார் கோபால், ஆழ்வார்திருநகரி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியலீலா, மாவட்ட சுகாதார அலுவலர் பொற்செல்வன், தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த், கவுன்சிலர் ஆனந்த், ஒன்றிய பொறியாளர் வெள்ளப்பாண்டியன், செயல் அலுவலர் சுப்பிரமணியன், ஆரம்ப சுகாதார மருத்துவமனை டாக்டர் பார்த்தீபன், உதவி இயக்குநர் வில்லியம் யோசுதாஸ், உதவி செயற்பொறியாளர் ஹரிஹரன், இளநிலை பொறியாளர் விஜயகுமார், இளநிலை உதவியாளர் சேக்அகமது உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஏரல் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் அதிகாரிகளுடன் கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Eral ,Yumbhagwat ,Eral taluk ,Kurangani Bypass ,
× RELATED வலசக்காரன்விளை பள்ளியில் காலை உணவு திட்டத்தை மாவட்ட அதிகாரி ஆய்வு