×

சில்லி பாயின்ட்…

* அகில இந்திய அளவிலான புச்சிபாபு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3வது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. இந்த தொடரில் பங்கேற்கும் 12 அணிகளும் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடி வருகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். டிஎன்சிஏ லெவன், டிஎன்சிஏ தலைவர் லெவன் அணிகள் தங்களின் முதல் போட்டியில் டிரா செய்ததால் வெற்றி கட்டாயம் என்ற நெருக்கடியில் உள்ளன.

* மெக்சிகோவில் நடந்த மான்டெர்ரி ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற லிண்டா நோஸ்கோவா (19 வயது, செக் குடியரசு) மகளிர் ஒற்றையர் பிரிவு உலக தரவரிசையில் 10 இடங்கள் முன்னேறி 25வது இடத்தை பிடித்துள்ளார். லிண்டாவிடம் பைனலில் தோற்று 2வது இடம் பிடித்த லூலு சுன் (23 வயது, நியூசிலாந்து) 16 இடங்கள் உயர்ந்து 41வது இடத்தில் உள்ளார்.

* சென்னையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் சென்னையைச் சேர்ந்த டிராகன் ரியோ கராத்தே பள்ளி மாணவர்கள் 15 தங்கம், 12 வெள்ளி, 6 வெண்கலம் வென்றனர். கட்டா பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினர்.

* 133வது துரந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 2வது அரையிறுதியில் இன்று நடப்பு சாம்பியன் மோகன் பகான் எஸ்ஜி – முன்னாள் சாம்பியன் பெங்களூர் எப்சி அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் ஐஎஸ்எல், ஃபெடரேஷன் கோப்பை, இந்தியன் சூப்பர் லீக் தொடர்களில் இதுவரை 24 முறை பலப்பரீட்சை நடத்தி உள்ளன. 14ல் கொல்கத்தாவும், 6 ஆட்டங்களில் பெங்களூருவும் வென்றுள்ளன (4 ஆட்டங்கள் டிரா). முதல் முறையாக துரந்த் கோப்பையில் சந்திக்கின்றன. இந்த ஆட்டத்தில் வென்றால் மோகன் பகான் 30வது முறையாகவும், பெங்களூரு 2வது முறையாகவும் பைனலுக்கு முன்னேறலாம்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : All India Buchibabu Test Cricket Tournament ,Dinakaran ,
× RELATED புச்சிபாபு டெஸ்ட் கிரிக்கெட்...