×

தமிழ்நாட்டில் 31ம் தேதி வரை மழை நீடிக்கும்

சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் 31ம் தேதி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா, தெற்கு கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதன் காரணமாக தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டல காற்று சுழற்சி தொடர்ச்சியாக நீடித்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை நீடித்து வருகிறது.

அதன்படி நேற்று ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதில் அதிகபட்சமாக நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் 30மிமீ மழை பெய்துள்ளது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதேபோல 27ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலும் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55கிமீ வேகத்தில் இன்று முதல் 29ம் தேதி வரை வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

The post தமிழ்நாட்டில் 31ம் தேதி வரை மழை நீடிக்கும் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Center ,South ,Kerala ,South Karnataka ,Maharashtra ,Gujarat ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...