×

ஊரை தாண்டினா எங்களை தெரியாதா? அண்ணாமலையின் பேச்சு காகிதப்பூ ; மல்லிகை இல்லை: வசனம் பேசும் உதயகுமார்

வாடிப்பட்டி: ஊரை தாண்டினால் அதிமுக தலைவர்களை யாருக்கும் தெரியாது என பேசிய அண்ணாமலையின் பேச்சு காகிதப்பூவே தவிர, மணம் பரப்பும் மல்லிகை இல்லை என்று உதயகுமார் தெரிவித்து உள்ளார்.  மதுரை மாவட்டம், சமயநல்லூரில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:

மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் எங்கள் பெயரை உச்சரித்து, மதுரை தாண்டி எங்களை யாருக்கும் தெரியாது என அண்ணாமலை கூறியுள்ளார். இப்போது உதயகுமார், செல்லூர் ராஜூ பெயர்கள் யாருக்கு தெரிகிறது என்பது பிரச்னை அல்ல. மதுரையில் அண்ணாமலையின் வெறும் பேச்சில் காற்று தான் வந்தது. தமிழக திட்டங்களுக்கு நிதி வாங்கித்தர முயற்சிக்காத அவர், திராவிடத்திற்கு முடிவு கட்டுவேன் என்கிறார்.

இது, வாக்களிக்காத மக்களை வஞ்சிக்கும் நடவடிக்கை. ஒன்றிய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதி வாங்கி கொடுத்திருக்கலாம். பிரதமரை அழைத்து வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி இருக்கலாம். இப்படி எதையும் செய்யாத அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை வசை பாடுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார்.

அண்ணாமலையை மக்கள் கவனிக்கிறார்கள். அவர் பேச்சு வெறும் பேச்சு, வெட்டிப் பேச்சு, வீண் பேச்சு, வீணர்கள் பேச்சு. மதுரையில் அவரது பேச்சு காகிதப்பூவே தவிர, மணம் பரப்பும் மல்லிகை இல்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவின்போது, அண்ணாமலை கட்சியில் இருந்தாரா என தெரியவில்லை.இவ்வாறு கூறினார்.

The post ஊரை தாண்டினா எங்களை தெரியாதா? அண்ணாமலையின் பேச்சு காகிதப்பூ ; மல்லிகை இல்லை: வசனம் பேசும் உதயகுமார் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Udayakumar ,Vadipatti ,AIADMK ,Samayanallur, Madurai district ,
× RELATED சமத்துவ சமூகம் உருவாக போராடிய...