×

தெற்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைந்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் புதிய வழித்தடம், இரட்டை பாதை திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும்: ஒன்றிய ரயில்வே துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தெற்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இரட்டை பாதை, வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்று ஒன்றிய ரயில்வே துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:

2024-25 நிதியாண்டில் வழக்கமான ரயில்வே பட்ஜெட்டில், தெற்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்திருக்கிறது. அதன் விளைவாக தமிழ்நாட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இரட்டை பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.

2024-25 நிதியாண்டுக்கான இந்திய ரயில்வே-க்கான வழக்கமான பட்ஜெட்டில், சில கணக்கு தலைப்புகளின் கீழ் தெற்கு ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. அதே ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைவு என வருத்தத்துடன் பதிவிடுகிறேன்.கணக்கு தலைப்பு 11 – புதிய பாதைகள் என்பதன் கீழ் இடைக்கால ஒதுக்கீடாக 976.1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீட்டில் வெறும் 301.3 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. நிதி ஒதுக்கீட்டில், புதிய வழித்தடத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில் ரூ.674.8 கோடி அளவிற்கு அதிரடி குறைப்பு செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் நடந்து வரும் பல முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் கடுமையாக பாதிக்கப்படும்.

அந்த வகையில், திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை, திண்டிவனம்-நகரி, அத்திப்பட்டு-புத்தூர், ஈரோடு-பழனி, சென்னை-கடலூர்-மகாபலிபுரம், மதுரை-தூத்துக்குடி (வழி-அருப்புக்கோட்டை), பெரும்புதூர்-கூடுவாஞ்சேரி-இருங்காட்டுக்கோட்டை-ஆவடி-பெரும்புதூர் ஆகிய 7 முக்கிய திட்டங்கள் பாதிக்கப்படும். அதேபோல், இரட்டை பாதை திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 285.64 கோடி அளவிற்கு குறைத்திருப்பது, மிகவும் அத்தியாவசியமாக உள்ள இரட்டை பாதை திட்டங்களை செயல்படுத்துவதை நிச்சயம் தாமதப்படுத்தும்.

மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மின்சார பேருந்து சேவைகள், பெருந்திரள் துரித ரயில் போக்குவரத்து திட்டத்தை மாநில அரசிடம் ஒப்படைப்பது போன்ற பணிகள் எவ்வித தாமதமும் இன்றி விரைவுபடுத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இருவழிப்பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நிதிப் பற்றாக்குறை காரணமாக முக்கிய திட்டங்களை மேலும் தாமதப்படுத்த கூடாது. இது தொடர்பாக ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

 

The post தெற்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைந்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் புதிய வழித்தடம், இரட்டை பாதை திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும்: ஒன்றிய ரயில்வே துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CM M.K.Stal ,Union Railway ,Minister ,CHENNAI ,Union Minister of Railways ,Dinakaran ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...