×

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

 

கோவை, ஆக. 17: சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்து கொண்டு அசத்தினர். நாட்டின் 78வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்று முன்தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக கோவை சிங்காநல்லூரை அடுத்த நஞ்சப்பா நகர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்காக பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. ஓவியப்போட்டி, ஓட்டப்பந்தயம், பலூன் உடைத்தல், ஊசி கோர்த்தல், ஸ்லோ சைக்கிள் உள்ளிட்ட போட்டிகளில் குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

பெண்களுக்கு லெமன் ஸ்பூன் விளையாட்டு போட்டியும், ஆண்களுக்கு கண்களைக் கட்டியபடி பானை உடைத்தல் போட்டியும், இருபாலருக்கும் லக்கி கார்னர் போட்டியும் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு திமுக மாநகர், மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், கவுன்சிலர்கள் சிவா, ஆதிமகேஸ்வரி ஆகியோர் பரிசு வழங்கினர். ஆண்டுதோறும் சுதந்திர தினவிழாவின்போது, பகுதி மக்களை ஒருங்கிணைத்து விளையாட்டு போட்டிகள் நடத்துவது ஒற்றுமை உணர்வு அதிகரிப்பதாக நஞ்சப்பா நகர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் தெரிவித்தனர்.

The post போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Independence Day ,Dinakaran ,
× RELATED மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த...