×

கடனாளியாகிட்டோம்னு சொல்லிகிட்டே இருந்ததால்… தாய்மாமன் சீர்வரிசையை ஊர்வலமாக சென்று திருப்பிக்கொடுத்த பெண்: பள்ளிப்பட்டு அருகே விநோத சம்பவம்

சென்னை: பள்ளிப்பட்டு அருகே 2 ஆண்டுக்கு முன் வழங்கிய தாய்மாமன் சீதனத்தை திரும்ப தரக்கோரி தொல்லை கொடுத்ததால், ஆத்திரமடைந்த பெண், உறவினர்களுடன் சீர்வரிசையை ஊர்வலமாக எடுத்துச் சென்று திருப்பி கொடுத்த விநோத சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பள்ளிப்பட்டு கீழ்நெடுங்கல் காலனியைச் சேர்ந்தவர் மீனா (36). இவரது கணவர் சுப்பிரமணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மீனாவின் மகள் வினிதாவுக்கு கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. அப்போது மீனாவின் தம்பி சரவணன் (38) தாய்மாமன் சீதனமாக புத்தாடை, பழங்கள், பாய், தலையணை, தட்டு உட்பட ரூ.2500 ரொக்கத்துடன் ஊர்வலமாக சென்று சீர் வரிசையை வழங்கினார். இந்நிலையில் சரவணன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருவதாகவும், அக்கா மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு செலவு செய்ததால் கடன் ஆனதாக கிராம மக்களிடம் சரவணன் மனைவி கூறி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், மஞ்சள் நீராட்டு விழாவில் வழங்கிய சீதனத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று மீனாவிடம் அவர் தொடர்ந்து வற்புறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மீனா, அவரது மகள் மஞ்சள் நீராட்டு விழாவின் போது தாய்மாமன் சீர்வரிசையாக வழங்கிய பொருட்கள் மற்றும் பணத்தை திருப்பித் தர முடிவு செய்து பழங்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஆடை உட்பட ரூ.2500 சீர்வரிசையை உறவினர்களுடன் எடுத்துச் சென்று தம்பி வீட்டின் வாசலில் நேற்று மாலை வைத்து விட்டு வந்தார்.  தாய்மாமன் சீர்வரிசையை திருப்பித்தந்த விநோத சம்பவம் அப்பகுதி மக்களை வருத்தம் கலந்த வியப்பில் ஆழ்த்தியது.

The post கடனாளியாகிட்டோம்னு சொல்லிகிட்டே இருந்ததால்… தாய்மாமன் சீர்வரிசையை ஊர்வலமாக சென்று திருப்பிக்கொடுத்த பெண்: பள்ளிப்பட்டு அருகே விநோத சம்பவம் appeared first on Dinakaran.

Tags : Pallipatu ,CHENNAI ,Thiruvallur District Tiruthani ,Pallipattu ,
× RELATED குளிர்பானத்தில் கழிவு பொருட்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி