×

கனமழை எச்சரிக்கை; ஊட்டி மலை ரயில் 15ம் தேதி வரை ரத்து

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற இந்த மலை ரயிலில் பயணம் செய்ய தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக அடர்லி-ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே நிலச்சரிவு ஏற்பட்டு பாறாங்கற்கள், மண் சரிந்து தண்டவாளம் சேதமடைந்ததால் ஆக.1ம் தேதி முதல் 6ம் தேதி வரை மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. ஆனால் நேற்றும், நேற்று முன்தினமும் மீண்டும் மலை ரயில் இயக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “மலை ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறாங்கற்கள், மரங்கள் விழுந்து சேதமடைந்த தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாலும், நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் ஆக.15ம் தேதி வரை மேட்டுப்பாளையம்-ஊட்டி, ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post கனமழை எச்சரிக்கை; ஊட்டி மலை ரயில் 15ம் தேதி வரை ரத்து appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Ooty ,Tamil Nadu ,Kerala ,Karnataka ,Andhra Pradesh ,UNESCO ,
× RELATED மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் சேவை...