கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெரிய ஓபுளாபுரம் அடுத்த ஈச்சங்காடு கடந்த சனிக்கிழமை ஒரு வாலிபர் உடல் புதைக்கப்பட்டு இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்ததும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, ஆரம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபரின் உடலை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர். இதில், அந்த வாலிபர் கொலை செய்து புதைக்கப்பட்டு இருப்பதும் தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தை சேர்ந்த பிரேம் குமார் (20) என்பதும் தெரியவந்தது. இவர், மீனம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதையடுத்து மாணவர் பிரேம்குமார் கொலைக்கான காரணம் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கல்லூரி மாணவர் கொலை பற்றி வெளியான திடுக்கிடும் தகவல்கள் வருமாறு; கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் பிரேம் குமார் தனது பகுதியை சேர்ந்த இரண்டு 10ம் வகுப்பு மாணவிகளுடன் பழகி வந்தபோது அவர்களை ஆபாசமாக படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை காட்டி இரண்டு மாணவிகளிடமும் அடிக்கடி பணம் பறித்துள்ளார். இதுபோன்று தொடர்ச்சியாக மாணவிகளிடம் ரூ.2½ லட்சம் வரை பிரேம் குமார் அபகரித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பிரேம்குமார் கேட்ட போதெல்லாம் பயந்துபோய் மாணவிகள் இருவரும் பணத்தை கொடுத்துக் கொண்டே இருந்துள்ளனர். தொடர்ந்து மிரட்டியதால் மேலும் இருவரும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி பணம் கொடுத்துள்ளனர். தான் கேட்கும்போதெல்லாம் மாணவிகள் பணம் கொடுத்ததால் பிரேம் குமாரின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மாணவிகள் தவித்து வந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட 2 மாணவிகளும் இதுபற்றி இன்ஸ்டாகிராமில் தங்களுடன் பழகி வந்த நண்பர் அசோக்கிடம் தெரிவித்துள்ளனர். அப்போது மாணவர் பிரேம்குமாரின் தொல்லை தாங்கமுடியவில்லை. என்ன செய்யலாம்? என கேட்டுள்ளனர். அப்போது நண்பர் அசோக் நான் அவனை பார்த்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார். இதன்பிறகு தான் பிரேம்குமார் கடத்தி கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.இதனால் மாணவிகளுக்காக அசோக் மாணவர் பிரேம் குமாரை கடத்தி கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது. இன்னும் அசோக் போலீஸ் பிடியில் சிக்காத நிலையில், அவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் இந்த கொலை வழக்கு தொடர்பாக பிடிபட்டுள்ள 4 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் 4 பேரும் மாணவிகள் இருவரின் நண்பர்கள் ஆவார்கள். கொலைக்கு இவர்கள் நேரடியாக உதவி செய்தார்களா? என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமறைவாக உள்ள அசோக்கை கண்டுபிடிக்கும் பணியில் ஆரம்பாக்கம் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.கல்லூரி மாணவர் பிரேம் குமார் கொலை தொடர்பாக பாதிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவிகள் இருவரிடமும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.‘பிரேம்குமார் அடிக்கடி மிரட்டி பணம் பறித்துக்கொண்டே இருந்ததாகவும், அதுபற்றி தங்களது இன்ஸ்டாகிராம் நண்பரான அசோக்கிடம் கூறியதாகவும் மாணவிகள் தெரிவித்துள்ளனர்’. எனவே, மாணவிகளின் தூண்டுதலின்படிதான் பிரேம்குமாரை அசோக் கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது. இதுதொடர்பாக பிடிபட்ட 2 மாணவிகளிடமும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ள மாணவிகளின் நண்பரான அசோக்கை கைது செய்ய போலீசார் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அவர் பிடிபட்ட பிறகே கல்லூரி மாணவர் கொலை வழக்கில் மாணவிகளின் பங்கு என்ன என்பது தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி பெண் டி.எஸ்.பி. ரித்து, இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ ஆகியோர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்….
The post சென்னை மாணவர் கொலை வழக்கு: மாணவிகளே தீர்த்துக்கட்டியது அம்பலம்: விசாரணையில் பகீர் தகவல்கள் appeared first on Dinakaran.