×

ராசிபுரம் அருகே பயங்கரம் மாயமான இளம்பெண் எரித்துக்கொலை

* ஏரிக்கரையில் சடலம் மீட்பு

* வாலிபரை பிடித்து விசாரணை

ராசிபுரம் : ராசிபுரம் அருகே தகாத உறவு விவகாரத்தில், இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சியில் 140 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரை பகுதியில், இரவு நேரங்களில் குடிமகன்கள் மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். நேற்று அப்பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவர், ஏரியின் அருகே ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றுள்ளார்.

அப்போது முள் மரங்கள் சூழ்ந்த பகுதியில், எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கிடப்பதை கண்டு திடுக்கிட்டார். இதுபற்றி ராசிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்? மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எங்கேனும் அந்த பெண்ணை கொலை செய்து, பின்னர் உடலை இங்கு கொண்டு வந்து எரித்தனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த நகைகள் அப்படியே இருப்பதால், இது நகைக்காக நடந்த சம்பவம் இல்லை என முடிவு செய்த போலீசார், அப்பகுதியில் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர்.

தீவிர விசாரணையில், எரித்து கொலை செய்யப்பட்ட பெண் வடுகமுனியப்பன் பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ரமேஷ் என்பவரின் மனைவி மணிமேகலை (25) என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: வடுக முனியப்பன் பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் மனைவி மணிமேகலை. திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு, மணிமேகலைக்கு வேறு ஒரு நபருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த அவரது கணவர் ரமேஷ், நாமகிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் இருதரப்பினரையும் அழைத்து சமரசம் பேசி, கணவருடன் சேர்ந்து வாழும்படி, மணிமேகலைக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மணிமேகலை மீண்டும் மாயமானார். நேற்று ஏரியில் பெண் சடலம் கிடப்பதாக தகவல் பரவியதால் சந்தேகமடைந்த ரமேஷ், அங்கு சென்று பார்த்த போது, அது மணிமேகலை என்பது உறுதியானது. மணிமேகலையின் செல்போனை கைப்பற்றி, அதில் அவருடன் பேசிய வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

The post ராசிபுரம் அருகே பயங்கரம் மாயமான இளம்பெண் எரித்துக்கொலை appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Lake Rasipuram ,Namakkal district ,
× RELATED புதிய ஸ்கேன் இயந்திரம் வாங்கி தருவதாக...