×

காவல் உதவி ஆய்வாளரை மிரட்டியதாக சம்பவ செந்திலின் நெருங்கிய நண்பர் வக்கீல் சிவகுருநாதன் மீது வழக்கு: வேறொரு வழக்கில் ஏற்கனவே கைதானவர்

சென்னை: காவல் உதவி ஆய்வாளரை மிரட்டியதாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சிவகுருநாதன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேறொரு வழக்கில் ஏற்கனவே கைதான இவர், பிரபல ரவுடியான சம்பவ செந்திலின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது. சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சிவகுருநாதன். இவர் பிரபல ரவுடி சம்பவம் என்ற சம்பவ செந்திலின் நெருங்கிய நண்பர் என கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சம்பவ செந்திலுடன் தொடர்பில் இருந்தவர்கள், அவருக்காக மாமூல் வசூலித்து கொடுத்தவர்கள் என ஒவ்வொருவராக கண்டறிந்து போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திக் என்ற கட்டிட ஒப்பந்ததாரரை மிரட்டி பணம் பறித்ததாக சம்பவ செந்தில், வழக்கறிஞர்கள் சிவகுருநாதன், சரவணன் உள்பட 13 பேர் மீது புது வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக வழக்கறிஞர்கள் சிவகுருநாதன், சரவணன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்துக்கு முன்னதாக கடந்த 21ம் தேதி வடக்கு மண்டல தனிப்படை போலீசார் வழக்கறிஞர் சிவகுருநாதனிடம், சம்பவ செந்தில் தொடர்பாக விசாரணை நடத்தி விட்டுச் சென்றனர். திருவான்மியூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் தமிழன்பன்தான் தனது வீட்டு முகவரியை வடக்கு மண்டல தனிப்படை போலீசாரிடம் தெரிவித்ததாக சிவகுருநாதன் கருதியுள்ளார்.

பிறகு உதவி ஆய்வாளர் தமிழன்பனை செல்போனில் தொடர்பு கொண்ட வழக்கறிஞர் சிவகுருநாதன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் ‘ஒரு பெண்ணுடன் உனக்கு தொடர்பு இருக்கிறது எனக் கூறி உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன்’ எனவும் உதவி ஆய்வாளர் தமிழன்பனை அவர் மிரட்டியதாக தெரிகிறது. இதுதொடர்பாக உதவி ஆய்வாளர் தமிழன்பன் அளித்த புகாரின் பேரில், திருவான்மியூர் போலீசார் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கிலும் வழக்கறிஞர் சிவகுருநாதனை கைது செய்ததற்கான ஆவணங்களை சிறை நிர்வாகத்தில் வழங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post காவல் உதவி ஆய்வாளரை மிரட்டியதாக சம்பவ செந்திலின் நெருங்கிய நண்பர் வக்கீல் சிவகுருநாதன் மீது வழக்கு: வேறொரு வழக்கில் ஏற்கனவே கைதானவர் appeared first on Dinakaran.

Tags : Sambhava Senthil ,Sivagurunathan ,CHENNAI ,Sivagrunathan ,Shambhala Senthil ,Thiruvanmiyur, Chennai ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு...