×

காவல் நிலையத்தில் மாஜி சிஆர்பிஎப் வீரர் சாவு கலால் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாருக்கு 7 ஆண்டு சிறை

வேலூர்: காவல் நிலையத்தில் மாஜி சிஆர்பிஎப் வீரர் இறந்த விவகாரத்தில், கலால் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் ராமலிங்கம் நகர் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் கோபி என்ற கோபால்(43), முன்னாள் சிஆர்பிஎப் வீரர். அதேபகுதியை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் சுகுமார் கொலை வழக்கில் சந்தேகத்தின்பேரில் இவரை கடந்த 2013 அக்டோபர் 1ம் தேதி குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இன்பரசன், தலைமை காவலர் உமாசந்திரன் ஆகியோர் மேல்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் திடீரென இறந்துவிட்டார். கை மற்றும் ஜன்னலில் மாட்டியிருந்த நீளமான விலங்கால் கழுத்தை நெரித்து தற்கொலை செய்து கொண்டதாக இன்ஸ்பெக்டர் முரளிதரன் உள்பட 3 பேரும் தெரிவித்தனர். பிரேத பரிசோதனையில் கோபால் மாரடைப்பு காரணமாக இறந்தது தெரியவந்தது. குடும்பத்தினர் புகாரின்படி சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் கடந்த 2017ல் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிந்து இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, ஏட்டு ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கை வேலூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு கோர்ட் நீதிபதி முருகன் விசாரித்து, இன்ஸ்பெக்டர் முரளிதரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இன்பரசன், தலைமை காவலர் உமாசந்திரன் ஆகியோருக்கு கொலை இல்லா மரணத்தை ஏற்படுத்துதல் உட்பட 2 பிரிவுகளின்கீழ் தலா 7 ஆண்டு சிறைதண்டனையும், முரளிதரன், உமாசந்திரன் ஆகியோருக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் அபராதமும், இன்பரசனுக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அபராத தொகையை கோபால் குடும்பத்தினருக்கு வழங்கும்படியும் உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் முரளிதரன் தற்போது வேலூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவிலும், ஏட்டு உமாசந்திரன் பரதராமி போலீஸ் நிலையத்திலும் பணியாற்றி வந்தனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இன்பரசன் ஓய்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post காவல் நிலையத்தில் மாஜி சிஆர்பிஎப் வீரர் சாவு கலால் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாருக்கு 7 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Vellore ,Vellore court ,Kudiatham Ramalingam Nagar Teacher's Colony ,Vellore District ,Dinakaran ,
× RELATED மாணவிகள் முன் நிர்வாண போஸ் உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர்