×

தெலங்கானாவில் அரசு மருத்துவமனை வளாகத்தில் தந்தையுடன் தூங்கிய 3 வயது சிறுவன் கடத்தல்

*2 வாலிபர்கள் கைது

திருமலை : அரசு மருத்துவமனை வளாகத்தில் தந்தையுடன் தூங்கிய 3 வயது சிறுவனை கடத்திச்சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் மாணிக்பந்தாரா கிராமத்தை சேர்ந்தவர் சாய்நாத்(34). இவரது மனைவி சாயா(30), மகன் அஜய்(3). மீண்டும் கர்ப்பமடைந்த சாயாவை, கடந்த 3 நாட்களுக்கு முன்பு நிஜாமாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தனர்.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி இரவு மகனுடன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள காத்திருப்போர் அறையில் சாய்நாத் தூங்கினார். நேற்றுமுன்தினம் அதிகாலை 3 மணியளவில் காத்திருப்போர் அறைக்கு மாஸ்க் அணிந்தபடி 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் சிறுவன் அஜய்யின் அருகே படுத்து தூங்குவது போல் நடித்துள்ளனர். பின்னர் சிறிதுநேரம் கண்ணை மூடிக்கொண்டு நோட்டமிட்டுள்ளனர். அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததை உறுதிசெய்த பின்னர், அவர்கள் இருவரும் நைசாக சிறுவன் அஜய்யை, துணியில் போர்த்தி கடத்திச்சென்றனர். இதையறியாமல் சிறிதுநேரத்திற்கு பின் எழுந்து பார்த்த சாய்நாத், தனது அருகே படுத்திருந்த மகனை காணாது திடுக்கிட்டார். அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை.

இதனால் கதறி அழுதபடி அங்குள்ள புறக்காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 2 வாலிபர்கள் தூங்குவதுபோல் நடித்து பின்னர் சிறுவனை கடத்திக்கொண்டு மருத்துவமனை வளாகத்தை விட்டு நடந்து செல்வதும், பின்னர் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருந்து பஸ் பிடித்து செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து கடத்தல்காரர்களை பிடிக்க நிஜாமாபாத் போலீஸ் உயரதிகாரிகள் 5 தனிப்படைகள் அமைத்தனர்.

அதன்பேரில் தனிப்படை போலீசார் அனைத்து சோதனைச்சாவடியிலும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். இதனிடையே ஜகத்யாலா மாவட்டம் மேட்பள்ளி கிராமத்தில் கடத்தல்காரர்கள் குழந்தையுடன் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்று குழந்தையை மீட்டு 2 வாலிபர்களையும் கைது செய்தனர். அவர்களது பெயர், விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. குழந்தையை கடத்தியது ஏன்? அவர்களுடன் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? இதுபோல் மேலும் குழந்தைகளை கடத்தினார்களா என்று அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

The post தெலங்கானாவில் அரசு மருத்துவமனை வளாகத்தில் தந்தையுடன் தூங்கிய 3 வயது சிறுவன் கடத்தல் appeared first on Dinakaran.

Tags : Telangana ,Saynath ,Manikbandara Village, Nizamabad District, Telangana State ,Chaya ,Hospital ,
× RELATED தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவராக மகேஷ்குமார் கவுட் நியமனம்..!!